கணவரின் பிறந்த நாள் பரிசாக கொலை செய்ய முடிவு செய்தேன்.. பீதியை கிளப்பும் அபிராமியின் வாக்குமூலம்!
கணவரின் பிறந்த நாள் பரிசாக அவரையே கொலை செய்ய முடிவு செய்தேன் என பீதியை கிளப்பும் வாக்குமூலத்தை அளித்துள்ளார் அபிராமி.
Recommended Video
சென்னை: கணவரின் பிறந்த நாள் பரிசாக அவரையே கொலை செய்ய முடிவு செய்தேன் என பீதியை கிளப்பும் வாக்குமூலத்தை அளித்துள்ளார் அபிராமி.
கள்ளக்காதலனுக்காக 2 குழந்தைகளை கொன்ற அபிராமி கணவரையும் கொன்றுவிட முடிவு செய்தார். இதற்காக 12 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த அவர் சிக்காமல் இருந்தால் சரி என இரவோடு இரவாக தலைமறைவானார்.
கேரளா சென்ற அவரை கள்ளக்காதலனை வைத்தே நாகர்கோவில் வரவழைத்து கைது செய்தது போலீஸ். அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் அதிர வைக்கும் வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்
அபிராமியின் வாக்குமூலத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் பீதியை கிளப்புவதாக உள்ளது. கணவர் மற்றும் குழந்தைகளுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தது, உயிர் பிழைத்த மகனின் மூச்சை திணறடித்து கொன்றது, கணவனை கொல்ல காத்திருந்தது என அதிர்ச்சியூட்டும் வகையிலேயே உள்ளது அபிராமியின் வாக்குமூலம்.
தெரியாமல் இருந்த கணவன்
30ஆம் தேதி குழந்தைகள், மனைவி என குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் அபிராமியின் கணவர் விஜய். ஆனால் அவருக்கு தெரியாது அதுதான் குழந்தைகளுடன் தான் கடைசியாக கொண்டாடும் பிறந்தநாள் என்று.
உயிர் தப்பினர்
காரணம் விஜயின் பிறந்த நாளில் அவருக்கும் குழந்தைகளுக்கும் மரணத்தை பரிசளிக்க இருந்தார் மனைவி அபிராமி. ஆனால் மகள் இறக்கவே, மகனும் தந்தையும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விலகாத குழந்தைகள்
இதுதொடர்பாக அபிராமி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, எங்கள் நெருக்கத்தை தெரிந்த என் அப்பா, என்னை வீட்டு சிறையில் வைத்தார். குழந்தைகளும் எப்போதும் என்னை விட்டு விலகாமல் இருந்தனர்.
தூக்க மாத்திரைகள்
இதுகுறித்து சுந்தரத்திடம் தெரிவித்தேன். அவர் மூன்று பேரையும் கொலை செய்தால்தான் நாம் ஜாலியாக இருக்க முடியும் என்றார். அதற்காக மூன்று பேரையும் கொலை செய்ய தூக்க மாத்திரைகளை வாங்கி தந்தார்.
பிறந்த நாள் பரிசாக
எனவே, கடந்த 30ம் தேதி இரவு எனது கணவர் விஜய் பிறந்த நாள் பரிசாக இவர்களை கொல்ல முடிவு செய்தேன். பாலில் 5 தூக்க மாத்திரைகளை கலந்து கணவர் மற்றும் 2 குழந்தைகளுக்கும் கொடுத்தேன். மறுநாள் அதிகாலையில் 3 பேரும் இறந்திருப்பார்கள் என்று நினைத்தேன்.
முத்தம் கொடுத்தால்..
ஆனால், கணவன் மற்றும் மகன் அஜய் ஆகியோர் சாகவில்லை. ஆனால், பெண் குழந்தை கார்னிகா படுக்கையிலேயே வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தாள். வேலைக்கு போகும் முன், தன் பெண் குழந்தைக்கு முத்தம் கொடுக்க கணவர் விஜய் அவள் அறைக்கு செல்ல முயன்றபோது நீங்கள் குழந்தைக்கு முத்தம் கொடுத்தால் எழுந்துவிடுவாள் என தடுத்தேன்.
கையாலேயே மகனை கொன்ற தாய்
வேலைக்கு சென்ற விஜயின் பின்னாலேயே சென்ற மகன் அஜய் கீழ் தளத்திற்கு சென்று ஹெல்மெட்டை கொடுத்து டாடா சொல்லி தந்தையை வழியனுப்பி வைத்தான். திரும்பி வந்த மகனை படுக்கை அறைக்கு அழைத்து சென்று மூக்கையும், வாயையும் பொத்தி துடி துடிக்க கொன்றேன்.
தப்பிய கணவன்
பின்னர் குழந்தைகளின் சடலத்தையும் படுக்கை அறையில் அருகருகே கிடத்திவிட்டு, இரவு நேரம் நெருங்கி விட்டதால் கணவரின் வருகைக்காக காத்திருந்தேன். அவரை கொலை செய்யும் முடிவில் இருந்தேன். கடந்த 31ம் தேதி மாத கடைசி நாள் என்பதால் வேலை பளு காரணமாக விஜய் வீட்டிற்கு வரவில்லை. அதனால் அவர் தப்பித்துவிட்டார். இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார் அபிராமி.