ஜெயலலிதா, சசிகலா மீதான வருமான வரி வழக்கு: ஜூன் 3க்கு ஒத்திவைப்பு
சென்னை: வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் ஆஜராகும் தேதியை நிர்ணயிப்பதை ஜூன் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை - எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்கு எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர குற்றவியல் கூடுதல் தலைமை நீதிமன்றத்தில் (பொருளாதாரக் குற்ற வழக்குகள்) நீதிபதி ஆர்.தட்சிணாமூர்த்தி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், வழக்கில் இருவரும் நேரில் ஆஜராகும் தேதியை நிர்ணயிப்பதை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
இதற்கு வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எனினும் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் ஆஜராகும் தேதியை நிர்ணயிப்பதை ஜூன் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.