திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் வீடு, மதுபான ஆலைகளில் ஐடி ரெய்டு: ரூ.20 கோடி சிக்கியது
சென்னை: திமுக முன்னாள் எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடு, மருத்துவ கல்லூரி மற்றும் மதுபான ஆலை உட்பட 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனையில் கணக்கில் வராத 20 கோடி ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
எம்.ஜி.ஆர். காலத்தில் அதிமுக எம்.பி.யாக இருந்தவர் ஜெகத்ரட்சகன். பின்னர் அவர் வீரவன்னியர் பேரவை என்ற தனிக்கட்சியை நடத்தி வந்தார். 2004-ம் ஆண்டு அந்த கட்சியை திமுகவுடன் இணைத்துவிட்டார் ஜெகத்ரட்சகன்.
இதனைத் தொடர்ந்து அவர் திமுக சார்பில் போட்டியிட்டு மத்திய அமைச்சராகவும் ஆனார். அப்போது அவரது வருமானம் மிக அதிகமாக உயர்ந்ததாக ஒரு சர்ச்சை எழுந்தது. அதேபோல் நிலக்கரி சுரங்க முறைகேடு மற்றும் மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கு அதிக பணம் பெற்றது என பல சர்ச்சைகளில் சிக்கியவர் ஜெகத்ரட்சகன்.
இந்த நிலையில் இன்று காலை முதல் ஜெகத்ரட்சகனின் வீடு, மருத்துவ கல்லூரி மற்றும் மதுபான ஆலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மொத்தம் 40 இடங்களில் நடைபெற்று வரும் இந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.20 கோடி பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
கைப்பற்றப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, தி. நகரில் உள்ள நட்சத்திர விடுதி, தி.நகர் அலுவலகம், அடையாறு உள்ளிட்ட இடங்களிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.