ஜெகத்ரட்சகன் வீட்டில் 40 கிலோ தங்கம், ரூ18 கோடி பறிமுதல்- ரூ600 கோடி சொத்து குவிப்பு?
சென்னை: திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவடைந்தது. இச்சோதனையில் கணக்கில் வராத 40 கிலோ தங்கம் மற்றும் ரூ18 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் வருமானத்துக்கு அதிகமாக சட்டவிரோதமாக ரூ600 கோடி சொத்துகளை ஜெகத்ரட்சகன் வாங்கிக் குவித்துள்ளதும் சோதனையில் தெரியவந்துள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் கடந்த 2 ஆண்டுகளாக ரூ200 கோடி அளவுக்கு வருமானவரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து இவருக்கு சொந்தமான சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள கல்வி நிலையங்கள், மருத்துவ கல்லூரிகள், ஓட்டல், வீடுகள் ஆகியவற்றில் வருமானவரி துறை அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து கடந்த 3 நாட்களாக சோதனை நடத்தினர்.
சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அடையாறில் உள்ள வீடு, அலுவலகம், தி.நகரில் உள்ள அக்கார்டு மெட்ரோபாலிட்டன் நட்சத்திர ஹோட்டல், குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கிழக்கு தாம்பரத்தில் உள்ள பாரத் பல்கலைக்கழகம், புதுச்சேரியில் உள்ள லட்சுமி நாராயணன் மருத்துவக்கல்லூரி மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள மதுபான ஆலை உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இச்சோதனையில் கணக்கில் வராத ரூ18 கோடி ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் 40 கிலோ தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சோதனைக்கு ஜெகத்ரட்சகன் 3 நாட்களும் முழு ஒத்துழைப்பு அளித்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சோதனையில் வருமானத்துக்கு அதிகமாக சட்டவிரோதமாக ரூ600 கோடி அளவுக்கு சொத்துகளை ஜெகத்ரட்சகன் வாங்கி குவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.