அழகேசனுடன் பழகாதே பேசாதே என்று சொன்னேனே... கதறி துடித்த அம்மா
அஸ்வினியை விரட்டி விரட்டி கொன்ற அழகேசன், எனக்கு கிடைக்காத நீ வேற யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று சொல்லியே கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளான்.
Recommended Video
சென்னை: அவனுடன் பேசாதே, பழகாதே என்று பலமுறை சொன்னேன். ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னேன், பாவி பயல் இப்படி செய்து விட்டானே என்று கொலை செய்யப்பட்ட அஸ்வினியின் தாய் சங்கரி கதறி துடித்த காட்சி பலரையும் கண் கலங்க வைத்தது.
மதுரவாயல் ஆலபாக்கம் தனலட்சுமிநகர் 6வது தெருவை சேர்ந்த மோகன், சங்கரி தம்பதியின் மகள் அஸ்வினி (19). இவர் கே.கே நகரில் உள்ள மீனாட்சி கலைக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தந்தை மோகன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
தனது தாய் சங்கரியுடன் அஸ்வினி வசித்து வந்தார். கூலி வேலை செய்து அஸ்வினியை படிக்க வைத்தார் தாய் சங்கரி. இவரது வீட்டின் அருகே வசித்து வந்த அழகேசன் சென்னை மாநகராட்சி 143வது வார்டில் சுகாதாரத்துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். வீடு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்து வருகிறார். அஸ்வினியின் வீட்டிற்கும் அழகேசன் தான் தண்ணீர் கேன் சப்ளை செய்து வந்தார்.
காதலை முறித்த அஸ்வினி
அஸ்வினி மீது அழகேசனுக்கு காதல் ஏற்படவே விரட்டி விரட்டி காதலித்துள்ளார். முதலில் காதலை ஏற்க மறுத்த அஸ்வினி பின்னர் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. தாய் எதிர்க்கவே, காதலை கை விட்டார் அஸ்வினி. உறவினர் வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். இதனால் அஸ்வினி மீது அழகேசனுக்கு ஆத்திரம் அதிகமானது.
அஸ்வினி மீது ஆத்திரம்
நீ எனக்கு கிடைக்க வில்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று அஸ்வினியை இரு தினங்களுக்கு முன்பு மிரட்டினார் அழகேசன். அஸ்வினி அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நேற்று வழக்கம் போல கல்லூரிக்கு சென்றார். குடிபோதையில் கல்லூரி வாசலில் காத்திருந்த அழகேசன், அஸ்வினியை விரட்டினார். ஏன் பேச மாட்டேங்கிறே என்று கூறி கையை பிடித்தார். அஸ்வினி விலகி ஓடினார்.
யாருக்கும் கிடைக்கக் கூடாது
இதனால் ஆத்திரமடைந்த அழகேசன், எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது என்று கூறியபடியே அஸ்வினியின் தலையை இடது கையால் பிடித்து கொண்டு வலது கையில் இருந்த கத்தியால் கழுத்தை அறுத்தார்.
இதைபார்த்த உடன் வந்த தோழிகள் கதறினர். மாணவிகள் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த கடைக்காரர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் ஓடிவந்து அழகேசனை மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
உயிருக்கு போராடிய அஸ்வினி
சக கல்லூரி மாணவி ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட செய்தி கேட்டு கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஓடி வந்து அழகேசனின் கைகளை கட்டிப்போட்டு தாக்க தொடங்கினர். அஸ்வினியின் ரத்தம் சாலையில் தேங்கியது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த மாணவியை சக மாணவர்கள் 3 பேர் தங்கள் ஸ்கூட்டரில் தூக்கி கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
இப்படி செய்து விட்டானே
அதிர்ச்சியடைந்த மாணவர்கள் அஸ்வினி தாய் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த தாய் சங்கரி,`அழகேசனுடன் பழகாதே பேசாதே என்று பல தடவைச் கூறினேன். ஆனால் நீ கேட்கவில்லையே. படுபாவி என் மகளை இப்படி கொலை செய்துவிட்டானே என்று கதறி அழுதார். உயிரிழந்த அஸ்வினி உடலை தனியார் மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரை எடுத்த காதலன்
சங்கரி வீட்டு வேலைசெய்துதான் குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறார். அஸ்வினியின் தம்பி அபினேஷ், ஐ.டி.ஐ படிக்கிறார். போலீஸில் அழகேசனைக் குறித்து புகார் கொடுத்ததும் அவர் பயந்தார். ஆனால் மீண்டும் அஸ்வினிக்கு தொல்லை கொடுத்து அவரது உயிரையும் எடுத்துவிட்டதாக அஸ்வினியின் உறவினர்கள் தெரிவித்தனர். எது எப்படியோ காதல் ஒரு அப்பாவி இளம் பெண்ணின் உயிரை காவு வாங்கி விட்டது.