சட்டசபை தேர்தலில் விஜயகாந்தை கிங்மேக்கராக பார்க்க விரும்புகிறேன்: நடிகர் கார்த்திக் ஐஸ்
நெல்லை: வரும் சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் கிங்மேக்கராக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான கார்த்திக் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய தேவர் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் சேதுராமபாண்டியனின் முதலாவது ஆண்டு நினைவு நாளான நேற்று அனுசரிக்கப்பட்டது. நெல்லையில் உள்ள சி.என். கிராமத்தில் அமைக்கப்பட்ட அவரின் உருவச் சிலை திறப்பு விழா நடைபெற்றது.
சிலை திறப்பு விழாவில் நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான கார்த்திக் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
வரும் தேர்தலில் நமக்கு எல்ல எதிர்காலம் இருக்கிறது. அன்பும், மரியாதையும் உள்ள கட்சியுடன் கூட்டணி வைத்து அதிக வாக்குகள் பெற்றும் நம் பலத்தை நிரூபிப்போம். தமிழ் சமுதாயம் தலை நிமிர மக்களுக்கு நல்லது செய்பவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்றார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கூட்டணி குறித்து நான் விரைவில் அறிவிப்பு வெளியிடுவேன். தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தமிழகத்தில் வெள்ள சேதம் ஏற்பட கால்வாய்கள் தூர்வாரப்படாததும், மணல் திருட்டும் தான் காரணம்.
நான் விஜயகாந்த்தை மதிக்கிறேன். அவர் சட்டசபை தேர்தலில் கிங் மேக்கராக இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.