அதிமுகவில் நான் 19 வருடம் சீனியராக இருந்தபோது தினகரன் எல்கேஜி.. போட்டு தாக்கிய ஓபிஎஸ்!
Recommended Video
உதகை: நான் அதிமுகவில் 19 ஆண்டுகளாக இருந்தபோது பெரியகுளம் தொகுதியில் எல்கேஜி படிக்க வந்தவர் தினகரன் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உதகையில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர்.
என்னை சேர்த்துவிட்டாரா டிடிவி?
நிகழ்ச்சியில் பேசிய ஓபிஎஸ், தன்னை தினகரன்தான் ஜெயலலிதாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்ததாக கூறி வருவதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஓபிஎஸ். அதுகுறித்து விளக்கமும் அளித்தார் ஓபிஎஸ்.
தினகரன் எல்கேஜி
டிடிவி தினகரனை சந்திப்பதற்கு முன்பே தான் பெரியகுளம் வார்டு பிரதிநிதியாக இருந்ததாக ஓபிஎஸ் தெரிவித்தார். அதிமுகவில் 19 ஆண்டுகள் தான் சீனியராக இருந்த போது எல்.கே.ஜி படிக்க, அதாவது 1999ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்காக பெரியகுளம் வந்தவர் டிடிவி தினகரன் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
தினகரனுக்கு வரலாறு தெரியாது
2008ஆம் ஆண்டு தினகரன் முதல்வராக சதித்திட்டம் தீட்டினார். இதனையறிந்து தான் 2008-ஆம் ஆண்டு முதல் டிடிவி தினகரனை எந்த கூட்டத்திலும் ஜெயலலிதா சேர்க்கவில்லை என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார். அதிமுக தியாகிகளின் வரலாறு தினகரனுக்கு தெரியாது என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
சசி குடும்பத்தை நீக்கிய ஜெ.
ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதே முதல்வராக சதித்திட்டம் தீட்டியது சசிகலா குடும்பம் என்றும் ஓபிஎஸ் குற்றம்சாட்டினார். இது தெரிந்துதான் ஜெயலலிதா சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்கினார் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
துரோகம் செய்ததால் நீக்கம்
துரோகம் செய்ததால்தான் ஜெயலலிதா கட்சியிலிருந்து நீக்கினார் என்றும் ஓபிஎஸ் கூறினார். அப்போது யார் துரோகிகள் என்று தெரிகிறதா என கூட்டத்தில் திரண்டிருந்த தொண்டர்களை பார்த்து கேட்டார் ஓபிஎஸ். அப்போது தினகரன்தான் என கத்தினர் தொண்டர்கள்.
மன்னிப்பு கடிதம் கொடுத்த சசி
இதைத்தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், பின்னர் சசிகலா மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து கட்சியில் சேர்ந்துகொண்டதையும் விளக்கினார். மேலும் தங்களை திரும்ப திரும்ப இதைத்சொல்ல வைக்க வேண்டாம் என்றும் ஓபிஎஸ் கூறினார்.