செலவுக்கு பணம் தரலை... அம்மாவை கொன்றேன்... அப்பாவையும் கொல்ல நினைத்தேன் - கொடூரன் தஷ்வந்த்
தன் தாயை தானே கொலை செய்ததாக தஷ்வந்த் ஒப்புக்கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பாவையும் கொல்ல நினைத்தேன் என்றும் தஷ்வந்த் கூறியுள்ளாராம்.
Recommended Video
சென்னை: செலவுக்கு பணம் கொடுக்காத அம்மாவை அடித்துக் கொன்றதாக தஷ்வந்த் வாக்குமூலம் அளித்துள்ளான். அவன் கொடுத்த வாக்குமூலத்தை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அப்பாவை போட்டுத்தள்ள திட்டமிட்டதாகவும் தஷ்வந்த் கூறியுள்ளானாம்.
ஹாசினி கொலையாளி தஷ்வந்த் கடந்த வாரம் சனிக்கிழமையன்று தனது தாய் சரளாவை கொன்றுவிட்டு தலைமறைவானார். தமிழக காவல்துறையினர் மும்பையில் தஷ்வந்தை கைது செய்தனர். போலீஸ் பிடியில் இருந்து தப்பினான் தஷ்வந்த். தேடுதல் வேட்டைக்குப் பின்னர் மீண்டும் தஷ்வந்த் கைது செய்யப்பட்டான்.
கை கால்களில் விலங்கு போட்டு தஷ்வந்தை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்துள்ளனர். மும்பையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் நேற்று இரவு சென்னை அழைத்து வரப்பட்டான். அவனிடம் இரவு முழுதும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
கொலை வழக்கில் வாக்குமூலம்
சரளா கொல்லப்பட்டது தொடர்பாக தஷ்வந்திடம் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றனர். அப்போது கொலையை தஷ்வந்த் ஒப்பு கொண்டதாக காவலர்கள் தெரிவித்தனர். மேலும் கொலைக்கு உதவிய நண்பர்கள், தாஸ், டேவிட் ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது.
பேச மறுத்தனர்
சிறுமியை கொலை செய்த வழக்கில் சிறையில் இருந்த என்னை சொத்துக்களை விற்று பெற்றோர் ஜாமீனில் எடுத்தனர். வெளியே வந்த பின்னர் என்னிடம் அவர்கள் சரியாக பேசவில்லை. எப்போதும் திட்டிக்கொண்டு இருந்தனர். சாப்பாடு கூட போடமாட்டார்கள்.
அழகிகளுடன் உல்லாசம்
புனே, பெங்களூர், மும்பை பகுதியில் உள்ள ரேஸ்கோர்சில் குதிரை பந்தயத்தில் ஈடுபட்டேன். இதற்காக எனக்கு அதிக அளவு பணம் தேவைப்பட்டது. அங்கு செல்லும் போது அழகியுடனும் உல்லாசமாக இருந்தேன்.
பணம் தேவை அதிகரித்ததால் பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்டேன். ஆனால் பணம் கொடுக்கமுடியாது என்று கூறினர்.
கொல்ல நினைத்தேன்
பணம் கொடுக்காத இரண்டு பேரையும் தீர்த்துக்கட்டி வீட்டில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து இருந்தேன். சனிக்கிழமையன்று அம்மா மட்டும் வீட்டில் இருந்தார். அவரிடம் பணம் கேட்டபோது கொடுக்க மறுத்தார். வேலைக்கு போகச்சொல்லி திட்டினார்.
அம்மாவை அடித்துக்கொன்றேன்
அப்போது கோபத்தில் வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் அம்மாவின் தலையில் அடித்தேன். அவர் மயங்கி விழாவை நான் போட்டு விட்டு டி.வி. பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரிந்தது. அப்பாவையும் கொன்று விடலாம் என்று முதலில் முடிவு செய்தேன். ஆனால் அவர் வேலைக்கு சென்றுவிட்டதால் திட்டத்தை மாற்றினேன்.
25 பவுன் நகை, பணம்
அம்மாவின் 25 பவுன் நகை மற்றும் ரூ. 20 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியே சென்று விட்டேன்.
ஜெயிலில் இருந்த போது நண்பர்களாக பழகிய சிட்லபாக்கத்தை சேர்ந்த டேவிட், ஜேம்ஸ் ஆகியோருடன் சென்று நகையை விற்றுத் தருமாறு செங்குன்றத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் கொடுத்தேன். ஆனால் அவர் நகையுடன் தலைமறைவாகி விட்டார்.
ரேஸ், விபச்சார விடுதி
இதனால் டேவிட், எனக்கு ரூ. 40 ஆயிரம் கொடுத்தான். அந்த பணத்துடன் முதலில் பெங்களூரு சென்றேன். பின்னர் அங்கிருந்து பஸ் மூலமே மும்பைக்கு போனேன் ஏற்கனவே அங்கு பழக்கமாகி இருந்த விபசார அழகியுடன் தங்கி ரேஸ்கோர்சில் பந்தயம் கட்டி உல்லாச வாழ்க்கை வாழ்ந்தேன்.
தப்பிக்க திட்டமிட்டேன்
மும்பை வந்த தனிப்படை போலீசார் என்னை கைது செய்தனர். சென்னைக்கு கொண்டு செல்வதற்காக விமான நிலையம் வந்த போது, சாப்பிடும் போது எனது ஒரு கையில் இருந்த கைவிலங்கை கழற்றிவிட்டு இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்த நான் ஓட்டலில் இருந்து தப்பி ஓடினேன். அங்கிருந்து சென்ற நான் கைவிலங்கு தெரியாதவாறு துணியை சுற்றிக் கொண்டு சலூன் கடைக்கு போய் ஷேவ் செய்தேன். ஹேர் ஸ்டைலை மாற்றினேன்.
வாட்ஸ் அப்பில் பரவிய படம்
அருகே உள்ள ஓட்டலில் வேலை கேட்டேன். அப்போது வாட்ஸ்-அப்பில் பரவிய படத்தை வைத்து யாரோ போலீசுக்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனை வைத்து போலீசார் மீண்டும் என்னை கைது செய்துவிட்டனர் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளான் தஷ்வந்த். அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்துக்கொண்டனர்.
குற்ற உணர்ச்சி இல்லாத தஷ்வந்த்
போலீசார் விசாரணையின் போது தஷ்வந்த் எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பதில் அளித்ததாக போலீசார் கூறினார். பிள்ளை என்று நினைத்து பெற்று வளர்த்தால் அது சைத்தானாக மாறி அம்மாவை கொன்று விட்டு அப்பாவையும் போட்டு தள்ளதிட்டமிட்டுள்ளது என்று உறவினர்கள் கோபத்துடன் கூறி வருகின்றனர்.
விசாரணைக்காக தஷ்வந்த் வைக்கப்பட்டுள்ள குன்றத்தூர் போலீஸ் நிலையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.