முதல்வராவது நிச்சயம் நடக்கும், முயற்சிகள் நடைபெறுகிறது.. கமல்ஹாசன் அதிரடி!
தான் தமிழக முதல்வராவது நிச்சயம் நடக்கும், அதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது என்று கமல்ஹாசன் மக்கள் நீதி மய்ய பொதுக்கூட்டத்தில் பேசி இருக்கிறார்.
திருச்சி: தான் தமிழக முதல்வராவது நிச்சயம் நடக்கும், அதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது என்று கமல்ஹாசன் மக்கள் நீதி மய்ய பொதுக்கூட்டத்தில் பேசி இருக்கிறார்.
திருச்சியில் உள்ள ஜி.கார்னர் மைதானத்தில் மக்கள் நீதி மய்ய பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசி வருகிறார். அதில் ''அலங்கார வார்த்தைகளை நம்பி வந்தவர்கள் செயல்பாடுகளால் ஏமாறமாட்டீர்கள். ஆடு தாண்டும் காவிரி அகண்ட காவிரியாகும் இடம் திருச்சி.'' என்றார்.
மேலும் ''காவிரியில் காலம் காலமான நமது உரிமையை அரசியல்வாதிகள் தட்டிப்பறிக்கின்றனர். பல நூறு ஆண்டுகளாக காவிரியில் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக குழப்பமும் பேராசையும் அதிகரித்துள்ளது.தீர்வு கிடைக்கும் நிலையில் சாக்கு போக்கு சொல்கின்றனர்.'' என்றார்.
மேலும் ''எல்லோரும் நான் முதல்வரானால் என்ன செய்வேன் என்று பேசினார்கள். முதல்வரானால் கையெழுத்து போடுவது பற்றி பேசுவது அதிகபிரசிங்கியாக சிலருக்கு தெரியும், ஆனால் முதல்வராவது நிச்சயம் நடக்கும், முயற்சிகள் நடைபெறுகிறது. பறக்க நினைத்தால் பறந்துவிடலாம். ஆகாய விமானம் அப்படித்தான் கண்டுபிடிக்கப்பட்டது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.