என்னை நீக்கும் அதிகாரம் சரத்குமாருக்கு இல்லை... கட்சியை கைப்பற்றுவேன்: எர்ணாவூர் நாராயணன்
சென்னை: என்னை நீக்கும் அதிகாரம் சரத்குமாருக்கு இல்லவே இல்லை. இப்போதும் நான் சமத்துவ மக்கள் கட்சியின் துணைத்தலைவர் தான். இதை யாரும் தடுக்க முடியாது.சரத்குமாரை நம்பி நாங்கள் கட்சியை வளர்க்கவில்லை. நாடார் பேரவை நிர்வாகிகளை கொண்டே கட்சியினை வளர்த்து வந்தோம் என்று கூறியுள்ளார் எர்ணாவூர் நாராயணன்
இது கட்சியை விட்டு நீக்கும் வாரம் என்பது போல அதுமுகவில் இருந்து பழ. கருப்பையா எம்.எல்.ஏவை நீக்கினார் ஜெயலலிதா. அதே நாளில் தனது கட்சியின் எம்.எல்.ஏ எர்ணாவூர் நாராயணனை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார் சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இருவருமே தங்கள் தரப்பு கருத்துக்களை செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்jதுள்ளனர்.
சமகவில் இருந்து நீக்கப்பட்ட எர்ணாவூர் நாராயணன் அ.தி.மு.க.வில் இணையப் போவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் வியாழக்கிழமையன்று பிற்பகலில் சமத்துவ மக்கள் கட்சியின் அவசர நிர்வாகிகள் கூட்டம் சரத்குமார் தலைமையில் நடந்தது. கட்சியை உடைக்கப் பார்க்கிறார்கள் என்று சரத்குமார் குற்றம்சாட்டிய அதேநேரத்தில் எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து சூடாகவே பேசினார்.
சரத்குமாருக்காக கட்சியில்லை.
2007-ம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து நான் உறுதுணையாக இருந்திருக்கிறேன். நாடார் பேரவையில் இருந்து ஏராளமான நிர்வாகிகளை கட்சியில் சேர்த்திருக்கிறேன். கட்சியின் தலைவராக உள்ள சரத்குமார், தொடர்ந்து கட்சி விட்டு கட்சி மாறி நிலையற்ற தன்மையிலேயே இருந்து வந்தார்.இந்தநிலையில் நடிகர் சங்க தேர்தல் வந்தது. இந்த தேர்தல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தொடக்கமாக அமைந்தது. என்ன காரணத்தினாலோ, நடிகர் சங்க தேர்தலில் அ.தி.மு.க. அவரை ஆதரிக்கவில்லை. அதற்காக அவர் அ.தி.மு.க. அரசுக்கு நெருக்கடி கொடுக்க நினைத்தார்.
ஓரட்கட்ட திட்டம்
என்னை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து ராஜினாமா செய்ய சொன்னார். கட்சிக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்து என்னை எம்.எல்.ஏ.வாக அழகு பார்த்தது அ.தி.மு.க. தான். எனவே ஜெயலலிதா கொடுத்த எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டேன். இதனால் என்னை கட்சியில் இருந்து ஓரங்கட்ட அவர் திட்டம் தீட்டினார்.
கட்சி மாறிய நிர்வாகிகள்
நான் சொல்லும் எதையுமே அவர் காதில் வாங்கவில்லை. கட்சி நிர்வாகி ஒருவர் தாக்கப்பட்டபோதும், கோஷ்டிபூசல் ஏற்பட்டபோதும் அவர் கண்டுகொள்ளவே இல்லை. அவரது இந்த போக்கால் விரக்தி அடைந்த கட்சியின் பொதுச் செயலாளர் உள்பட மாநில-மாவட்ட நிர்வாகிகள் சிலர் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
என்னை நீக்க முடியாது
கட்சியின் துணைத்தலைவராக இருக்கும் என்னை கட்சியை விட்டு நீக்கியதாக சரத்குமார் அறிவித்து உள்ளார். ஒரு தொண்டனை நீக்குவதாக இருந்தாலும், அவருக்கு முறையான ‘நோட்டீஸ்' வழங்க வேண்டும். இதற்கு சட்டப்படி நிறைய நடைமுறைகள் உள்ளன. அப்படி இருக்கையில் எப்படி என்னை உடனடியாக நீக்கி அறிவிப்பு வெளியிட முடியும்? என்னை நீக்கும் அதிகாரம் சரத்குமாருக்கு இல்லவே இல்லை. இப்போதும் நான் சமத்துவ மக்கள் கட்சியின் துணைத்தலைவர் தான். இதை யாரும் தடுக்க முடியாது.
சரத்குமாரை நம்பியில்லை
சரத்குமாரை நம்பி நாங்கள் கட்சியை வளர்க்கவில்லை. நாடார் பேரவை நிர்வாகிகளை கொண்டே கட்சியினை வளர்த்து வந்தோம். இதை சொல்வதில் ஒன்றும் தவறில்லை. தன்னிச்சையாக செயல்படும் ஒரு தலைவரை வைத்து கட்சி நடத்துவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
கட்சியைக் கைப்பற்றுவோம்
என்னை நீக்கியதாக சரத்குமார் அறிவித்ததில் இருந்து, எனக்கு ஆதரவு பெருகி வருகிறது. சமத்துவ மக்கள் கட்சியில் உள்ள 30 மாவட்ட செயலாளர்களில் 20 பேர் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். எனவே விரைவில் போட்டி பொதுக்குழு கூட்டத்தை நடத்தி, சமத்துவ மக்கள் கட்சியை விரைவில் நாங்கள் கைப்பற்றுவோம். எனது ‘மெஜாரிட்டி'யை நிச்சயம் காட்டுவேன்.
அதிமுக உறுப்பினர்
சரத்குமாருக்கும், எனக்கும் எம்.எல்.ஏ. அந்தஸ்து கொடுத்தது அ.தி.மு.க. தான். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றதால், நானும் ஒரு அ.தி.மு.க. உறுப்பினர் தான். எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பேன். ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க எனது ஆதரவாளர்களுடன் நான் களப்பணியில் ஈடுபடுவேன் என்று கூறியுள்ளார்.
இருப்பது 2 எம்.எல்.ஏ அதுல ஆள் ஆளுக்கு கட்சியை உடைக்கப் போவதாக கூறுவது தமிழக அரசியல் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.