ஒவ்வொரு தெருவின் பிரச்சனையும் தெரியும்.. அதனை தீர்ப்பதே கடமை.. ஆர்கே நகர் வேட்பாளர் மருதுகணேஷ் உறுதி
ஆர்.கே. நகர் தொகுதியில் உள்ள ஒவ்வொரு தெருவின் பிரச்சனையும் தனக்கு தெரியும் என்றும் அதனை தீர்ப்பதே தனது கடமை என்றும் திமுக வேட்பாளர் மருது கணேஷ் கூறியுள்ளார்.
சென்னை: நட்சத்திரத் தொகுதியாக மாறியிருக்கின்ற ஆர்.கே. நகர் தொகுதியில் திமுக சார்பில் பத்திரிகையாளர் மருது கணேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைந்ததையடுத்து காலியாக அறிவிக்கப்பட்ட இந்தத் தொகுதியில் வரும் 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்களை முக்கிய கட்சிகள் அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கிவிட்டன.
இந்த சுறுசுறுப்பான பிரச்சாரத்தின் இடையே திமுக சார்பில் போட்டியிடும் மருதுகணேஷ், ஒன் இந்தியாவிடம் கூறியதாவது:
எந்தத் தெருவில் பிரச்சனை?
நடைபெற உள்ள ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளேன். இந்த தொகுதி மக்களின் பிரச்சனைகளை நன்கு அறிந்தவன் நான். எந்தத் தெருவில் என்ன பிரச்சனை, எந்தெந்த பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ளன. அதனை தீர்ப்பதற்கு என்ன வழி என அனைத்து விஷயங்களையும் தெரிந்து அறிந்து வைத்துள்ளேன்.
குப்பை கிடங்கு
எங்கள் தொகுதியில் கழிவு நீர் பிரச்சனை நீண்ட நாட்களாக இருக்கின்றது. கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தினால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள மக்கள் மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாறும் காசிமேடு
கொருக்குப் பேட்டை ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டு விடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஐஓசி பேருந்து நிலையத்தில் நிழற்கொடை இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கட்டமைப்பு வசதி இல்லாமல் இருப்பதால் சேரும் சகதியுமாக, குப்பையும் கூளமுமாக காணப்படுகிறது. குண்டும் குழியுமான சாலைகளால் மீனவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தொற்று நோய் பரவும் இடமாக மீன்பிடித் துறைமுகம் உள்ளது.
ஏழை சொல் அம்பலம்…
இப்படி எங்கள் தொகுதியின் பிரச்சனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தத் தொகுதியில் கூலித் தொழிலாளிகள், ஏழை எளிய மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர் என்பதால் இவர்களின் பிரச்சனைகள் அம்பலத்தில் ஏறுவதில்லை. இதனால் இந்தத் தொகுதி மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, திமுக வெற்றி பெற்றால் இதற்கெல்லாம் ஒரு விடிவு கிடைக்கும். இந்த தொகுதியின் நிலை நிச்சயம் மாறும் என்று மருது கணேஷ் உறுதியாக கூறியுள்ளார்.