உங்களுக்காக நான்.. உங்களுக்காகவே நான்… விரைவில்.. ஆதரவாளர்களுக்கு தீபா "நற்செய்தி"!
வேலூர் மாவட்டத்தில் இருந்து தீபா ஆதரவாளர்கள் அவரது வீட்டு முன் கூடினர். அவர்களிடம் விரைவில் உங்களுக்காக பணி செய்ய வருகிறேன் என்று தீபா நம்பிக்கைத் தெரிவித்தார்.
சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டு வாசல் முன்பு அன்றாடம் கூட்டம் கூட்டமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிருப்தி அதிமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இவர்களிடம் "அமைதி காக்குமாறும், விரைவில் உங்களுக்காக பணியாற்ற வருகிறேன்" என்றும் தீபா நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதுகுறித்து தீபா மேலும் கூறியதாவது:
"உங்கள் அனைவரையும் விரைவில் சந்தித்து கருத்துக்களைப் பரிமாற உள்ளேன். அப்போது அனைவரின் விருப்பங்களும் கேட்டுக் கொள்ளப்படும். அனைவரின் கருத்தையும் தெரிவிக்க கருத்துப் பெட்டி ஒன்றும் இங்கே வைக்கப்பட உள்ளது. அதில் உங்கள் விருப்பங்களை மனுவாகப் போடலாம். என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயம் நான் காப்பாற்றுவேன்.
விரைவில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்க உள்ளது. அதனை சிறப்பாக கொண்டாடுங்கள். அன்று முதல் நமது பயணமும் தொடங்கும். ஒரு நல்ல எதிர்காலத்தை நோக்கி இந்தப் பயணம் இருக்கும். அம்மா பெயரும், புகழும் ஓங்க வேண்டும். உங்களுக்காக நான் மிக விரைவில் பணியாற்ற வருவேன். அதுவரை அனைவரும் அமைதி காக்க வேண்டும்.
சிறிது காலம் பொறுமை காக்க வேண்டும். ஜெயலலிதாவின் புகழை ஓங்கச் செய்ய வேண்டும்" என்று தீபா கூறினார்.