தினகரனை விட அதிக ஓட்டு வாங்கி ஜெயிக்கிறேன் பாருங்க.. மதுசூதனன் சூளுரை!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன் என ஓபிஎஸ் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு அதிமுக சார்பில் மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன் என மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்கே.நகர் தொகுதிக்கு வரும் 12 தேதி தேர்தல் நடைபெறுகிறது. திமுக, சசிகலா தரப்பு அதிமுக, தேமுதிக, உள்ளிட்ட கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர்.
சுயேட்சைகள் உட்பட பல் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து விட்டனர். அனல் பறக்கும் பிரச்சாரமும் தொடங்கிவிட்டது. ஆனால் சசிகலா தரப்புக்கு பெருகும் குடைச்சலாக உள்ள ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக இதுவரை வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தது.
மதுசூதனன் வேட்பாளராக அறிவிப்பு
இந்நிலையில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஓபிஎஸ் தரப்பு அதிமுகவினர் இன்று தங்களின் வேட்பாளர்களை அறிவித்தனர். ஓபிஎஸ் தரப்பு அதிமுக சார்பில் அவைத் தலைவர் மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தினகரனை வீழ்த்துவேன்
இதைத்தொடர்ந்து மதுசூதனன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தினகரனை விட அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என அவர் கூறினார்.
மண்ணின் மைந்தன், உள்ளூர்க்காரன்
தான் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்.கே.நகரில் வசித்து வருவதாகவும் மதுசூதனன் கூறினார்.நான் மண்ணின் மைந்தன், உள்ளூர்க்காரன் என்றும் மதுசூதனன் பெருமிதத்துடன் கூறினார். தொகுதிக்காக தான் நிறைய செய்துள்ளதாகவும் மதுசூதனன் தெரிவித்தார்.
ஜெ.வின் மாற்று வேட்பாளர்
1991ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆர்கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுசூதனன் கைத்தறிதுறை அமைச்சராக இருந்தார். கடந்த சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு மாற்று வேட்பாளராகவும் மதுசூதனன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.