திமுக அனுப்பியுள்ள நோட்டீஸை சட்டரீதியாக சந்திப்பேன்: வைகோ
சென்னை: திமுக அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீஸை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தேமுதிகவுடன் திமுக பேரம் பேசியதாக குற்றம்சாட்டியது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திமுக தலைவர் கருணாநிதி தனது வழக்கறிஞர் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், திமுக மீது வைகோ அவதூறான கருத்துகளை பரப்புவதாகவும், அதற்கு சட்டப்படி விளக்கம் அளிக்கவேண்டும் என்றும், திமுக மீது வைகோ கூறிய குற்றச்சாட்டை ஏழு நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும் என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து வைகோ கூறுகையில், திமுக நோட்டீஸ் அனுப்பியதையும், வழக்கு போடுவதாக கூறியதையும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். திமுக நோட்டீஸ் அனுப்பியதை சட்டரீதியா எதிர்கொள்வேன். நான் கூறிய கருத்தை திரும்பப் பெறப்போவதில்லை. தேமுதிக பேரம் பேசவில்லை. திமுகதான் பேரம் பேசியது'' என்றார்.