ரஜினியை விமர்சித்தால்.. வழக்கு தொடர்வேன்.. சு.சுவாமிக்கு அர்ஜூன் சம்பத் மீண்டும் வார்னிங்
ரஜினியை தொடர்ந்து விமர்சித்தால் சுப்பிரமணியன் சுவாமி மீது வழக்கு தொடர்வேன் என மீண்டும் வார்னிங் கொடுத்துள்ளார் அர்ஜூன் சம்பத்.
தூத்துக்குடி: நடிகர் ரஜினிகாந்தை சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்தால் வழக்கு தொடர்வேன் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் எச்சரித்துள்ளார்.
ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பல கருத்துக்களை கிண்டலடித்து கூறி வருகிறார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருப்பதுதான் நல்லது என்று முதலில் கூறினார். பின்னர் அவர் படிக்காதவர் என தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி.
சு. சுவாமி மன்னிப்பு கேட்க வேண்டும்
சுப்பிரமணியன் சுவாமியின் இந்தக் கருத்துக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஜினியை கலாய்த்த சுப்பிரமணியன் சுவாமி, ரஜினியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அர்ஜுன் சம்பத் எச்சரித்தார்.
ரஜினியின் அரசியல் பிரவேசம்
இந்நிலையில், இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை அர்ஜூன் சம்பத் சந்தித்தார். அப்போது ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து மீண்டும் தனது கருத்துக்களை தெரிவித்தார்.
நிச்சயம் அரசியல் மாற்றம்
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று கூறினார். அவரது அரசியல் பிரவேசம் குறித்து பேச மீண்டும் ரஜினியின் வீட்டிற்கு செல்லவிருப்பதாகவும் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
வழக்கு தொடர்வேன்
இதனைத் தொடர்ந்து பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்தார். ரஜினிகாந்த் பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பினால் வழக்குத் தொடர்வேன் என்று அர்ஜூன் சம்பத் எச்சரித்துள்ளார்.