எப்பப் பார்த்தாலும் என் வீ்ட்டையே சுத்திக்கிட்டு.. போலீஸ் மீது பாயும் சசிகலா புஷ்பா!
மதுரை: சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் எவ்வளவோ இருக்க என் வீட்டையே சுற்றிக் கொண்டு எங்களை மிரட்டுவதுதான் போலீசுக்கு வேலையா என்று சசிகலா புஷ்பா எம்பி போலீசார் மீது காட்டமாக குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜராகி முன் ஜாமீன் பெறுவதற்காக மதுரை வந்தார் சசிகலா புஷ்பா எம்பி.. அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரிலே நான் மதுரைக்கு வந்துள்ளேன். நிலுவையில் உள்ள வழக்கு குறித்து எதுவும் பேச விரும்பவில்லை. போலீசார் நாள் தோறும் என் வீட்டுக்கு வந்து எங்களை மிரட்டுகிறார்கள். அச்சுறுத்துகிறார்கள். அரசியலுக்கு பெண்கள் வருவதே பெரிய கஷ்டம். அதிலும் இதுபோன்ற பிரச்சனைகள் என்றால் என்ன செய்வது?
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்புத் தேவை. டி.எஸ்.பி விஷ்ணு பிரியா தற்கொலை மற்றும் சென்னையில் ஐடி பெண் சுவாதி கொலை ஆகிய சம்பவங்கள் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடப்பதற்கான எடுத்துக்காட்டுகளாகும்.
நான் நேர்மையாக இருந்ததால் என் மீது எந்த வழக்கும் போட முடியவில்லை. தேவையில்லாமல் என் குடும்பத்தாருக்கு தொல்லை கொடுத்து வருகிறார்கள் போலீசார். போலீசுக்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை எவ்வளவோ உள்ளது. அதையெல்லாம் விட்டுவிட்டு என் வீட்டையே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா? கடந்த 1ம் தேதி முதல் என் வீட்டில் உள்ள யாருக்குமே நிம்மதி இல்லை. போலீஸ் தொல்லையால் பிள்ளைகள் பயந்து கொண்டிருக்கின்றன. தொடர்ந்து இந்த மாதிரி நெருக்கடி வந்தால் நானும் வழக்கு போட வேண்டியது வரும்.
நான் ஒரு போதும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். எனக்கு தொல்லைகள் தொடர்ந்தால் அதுபற்றி பாராளுமன்றத்தில் பேசுவேன். ஊடகங்கள் தங்களது பணிகளை சரியாக செய்வதால்தான் இரவில் கூட பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடிகிறது.
இவ்வாறு சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.