விரைவில் ஜெயலலிதாவை சந்திப்பேன்.. மாஜி "தளபதி" திருநாவுக்கரசர் தகவல் #jayalalithaa
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் பழைய நண்பரும், அவருக்கு ஒரு காலத்தில் தளபதி போல இருந்தவரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவருமான திருநாவுக்கரசர், முதல்வர் ஜெயலலிதாவை விரைவில் சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக முதல் முறையாக உடைந்தபோது ஜெ அணியில் இடம் பெற்றவர் திருநாவுக்கரசர். அப்போது இவரும், சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனும் ஜெயலலிதாவின் தளபதிகளாக செயல்பட்டனர்.
ஜெயலலிதா அணியின் எம்.எல்.ஏக்களை ஆம்னி பஸ் வைத்து பாதுகாப்பாக கூட்டிச் சென்றனர். பின்னர் ஜெயலலிதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். திருநாவுக்கரசர் தற்போது காங்கிரஸ் தலைவராக இருக்கிறார்.
ஜெயலலிதா குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் திருநாவுக்கரசர்.இதுகுறித்து அவர் கூறியதாவது...
ஜெ. நலம் பெற வேண்டும்
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
பல ஆண்டுகள் இணைந்து பணியாற்றினேன்
நான் அதிமுக இளைஞரணிச் செயலாளராக இருக்கும்போது அவர் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்தார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது நான் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தேன். அவருடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன்.
ஜெ.வை சந்திப்பதில் பிரச்சினை இல்லை
எனவே, தனிப்பட்ட முறையிலும், தமிழக காங்கிரஸ் தலைவர் என்ற முறையிலும் முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நிச்சயம் சந்திப்பேன்.
நேரி்ல் பார்க்கவில்லை
முதல்வரிடம் உடல்நலம் குறித்து நலம் விசாரிக்க அப்பலோ மருத்துவமனைக்குச் சென்றவர்கள் யாரும் அவரை நேரில் பார்த்ததாகவோ, நேரில் நலம் விசாரித்ததாகவோ சொல்லவில்லை.
அனுமதி கிடைத்தால் சந்திப்பேன்
இந்நிலையில், நானும் மருத்துவமனைக்குச் சென்று அவருக்கு தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை. முதல்வர் குணமடைந்ததும் அனுமதி கிடைத்தால் அவரை நேரில் சந்தித்துப் பேசுவேன் என்றார் திருநாவுக்கரசர்.