'ஏர்போர்ட்'டில் பேட்டியளிக்கும் நாராயணசாமியாக இருக்க விரும்பவில்லை: பொன்னார் 'பொளேர்'!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஒவ்வொரு முறையும் பேட்டியளித்து முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமியைப் போல இருக்க தாம் விரும்பவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி, டெல்லியில் இருந்து எப்போது சென்னை திரும்பினாலும் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் 'நாலு' வார்த்தை கூறிவிட்டுதான் செல்வார். அதனாலேயே "ஏர்போர்ட் நாராயணசாமி (நா.சா)" என்ற பெயரும் வந்தது.
நாராயணசாமி இப்படி பேட்டி கொடுப்பதை அப்போதே பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன. இந்த நிலையில் மத்தியில் இணை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் சென்னை வந்து செல்லும் போது பொன். ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுப்பதை வழக்கமாக கொண்டனர்.
இதனால் எங்கே தம்மையும் ஒரு நாராயணசாமியாக்கிவிடுவார்களோ என்று பதுங்கிய பொன். ராதாகிருஷ்ணன் இன்று அதை வெளிப்படையாகவே செய்தியாளர்களிடம் சொல்லியும் விட்டார்.
இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
ஒவ்வொரு முறை சென்னைக்கு வந்து செல்லும்போது செய்தியாளர்களுக்கு நான் பேட்டியளிக்க விரும்பவில்லை. ஏதாவது முக்கியமான செய்திகள் இருந்தால் உங்களிடம் நானே பேசுகிறேன்.
விமான நிலையத்தில் நின்று கொண்டு நான் ஒவ்வொரு முறையும் பேட்டியளித்து மற்றொரு நாராயணசாமியாக மாற விரும்பவில்லை. ஏனெனில் எங்கள் பாரதிய ஜனதாவுக்கு நாடகம் எதுவும் போட தெரியாது. நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய மட்டுமே தெரியும்.
காவிரி மேலாண்மை வாரிய பிரச்னையை பொறுத்தமட்டில் தமிழகத்துக்கு நன்மையானதை மத்திய அரசு நிச்சயமாக செய்யும்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.