மகனை இழந்த துயரம்.. இனி குடிக்க மாட்டேன்.. கதறி அழும் தினேஷின் தந்தை மாடசாமி
இனி மது அருந்தபோவதில்லை என தினேஷ் தந்தை மாடசாமி உறுதி அளித்துள்ளார்.
Recommended Video
சங்கரன்கோவில்: என் மகன் தினேஷ் விருப்பப்படி இனி மது அருந்தமாட்டேன் என்று தற்கொலை செய்துகொண்ட மாணவனின் தந்தை மாடசாமி உறுதி அளித்துள்ளார்.
சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி. குடிப்பழக்கம் உடைய இவர், தினமும் வீட்டில் வந்து தகராறு செய்து வந்திருக்கிறார். இதனால் தனது தந்தை இப்படி தினமும் குடித்துவிட்டு வருவதால் மனமுடைந்த மகன் தினேஷ் என்ற 17 வயது மாணவன், மனமுடைந்து ரயில்வே மேம்பாலத்தில் பள்ளிச் சீருடையுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அத்துடன் தன் மரணத்திற்கு பிறகாவது குடிக்காமல் இருக்க வேண்டும் என்று தந்தைக்கு உருக்கமான கடிதம் ஒன்றினையும் எழுதியிருந்தார்.
அதில் டாஸ்மாக் கடைகளை பிரதமர் மோடியும், முதலமைச்சர் பழனிசாமியும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் ஆவியாக வந்தாவது மதுக்கடைகளை ஒழிப்பேன் என்றும் அந்த கடிதத்தில் ஆவேசத்துடன் மாணவன் தினேஷ் பதிவு செய்திருந்தார். தினேஷின் இந்த தற்கொலை சம்பவத்தினால் தமிழக மக்கள் மிகவும் வேதனைக்குள்ளானார்கள். அரசியல் கட்சி தலைவர்களும் மதுக்கடைகளுக்கு எதிராகவும் தினேஷின் மரணம் அனைவருக்கும் பாடமாக இருக்கட்டும் என்றும் தங்களது கண்டனங்களையும், கருத்துக்களையும் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், தினேஷின் தந்தை மாடசாமி இனி சத்தியமாக மது அருந்த போவதில்லை என்று உறுதி அளித்துள்ளார். தனது 3 குழந்தைகளையும் மருத்துவம் படிக்க வைக்க தினேஷ் விரும்பியதால் அவர் ஆசைப்படியே அவர்களை மருத்துவம் படிக்க வைப்பேன் என்றும் கூறியுள்ளார்.
இது கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் போன்றது. ஒரு நல்ல மகனை இழந்துதான் இதுபோன்ற தந்தைகளுக்கு புத்தி வரவேண்டுமா? மாடசாமி இனி குடிக்க மாட்டேன் என்று ஆயிரம் சத்தியம் செய்தாலும் தினேஷ் உயிருடன் வரப்போவதில்லை. குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்ற நிலை இனி ஏற்படாமல் இருக்க வேண்டும். ஒருவேளை மதுஅருந்த மாட்டேன் மற்றும் 3 குழந்தைகளை மருத்துவம் படிக்க வைப்பேன் என்ற முடிவுகளில் மாடசாமி உறுதியாக இருந்தால் அது தினேஷின் ஆன்மாவை ஓரளவாவது திருப்திபடுத்தும்.