மகளிரணி பதவியை போதும்.. விட்டுக் கொடுக்க மாட்டேன்.. கனிமொழி ஓபன் டாக்
மகளிரணி செயலாளர் பதவியை எக்காரணம் கொண்டு விட்டுக்கொடுக்க மாட்டேன் என திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை: இருக்கும் பதவியே எனக்கு போதும், பெரிய பொறுப்புகளின் மீது எப்போதுமே எனக்கு விருப்பம் இருந்தது கிடையாது என திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை பெரியார் திடலில் திராவிடர் கட்சித் தலைவர் கி.வீரமணியை எம்.பி. கனிமொழி இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். 2ஜி வழக்கிலிருந்து விடுதலையானது குறித்து கனிமொழியிடம் திராவிடர் கட்சியின் தலைவர் கி.வீரமணி வாழ்த்துகளை தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, தற்போது நான் வகிக்கும் பதவியே எனக்கு போதும். பெரிதாக நான் என்றுமே ஆசைப்பட்டதில்லை. ஆனால் எக்காரணம் கொண்டும் இந்த பதவியை நான் விட்டுத்தரமாட்டேன். திமுகவில் நான் பெரிதாக எந்த பதவியும் கேட்கப் போவதில்லை என்றார்.
திராவிட இயக்கங்களுக்கு எதிராக செய்யப்பட்ட சதிதான் 2ஜி வழக்கு என்று கூறிய அவர், மேல்முறையீடு செய்தால் கூட சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஊர்ஜிதம் செய்தது போல தன்னுடைய வழக்கிலும் விடுதலையை உச்சநீதிமன்றம் ஊர்ஜிதம் செய்யும் என்றார்.