தனிக்கட்சி தொடங்க மாட்டேன்... அதிமுகவை மீட்பேன் - டிடிவி தினகரன் திட்டவட்டம்
தனிக்கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படுவது வெறும் வதந்தி மட்டுமே. கட்சியை மீட்டு எடுக்கவே முயற்சி செய்து வருகிறேன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மதுரை: தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்க உள்ளதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.தனிக்கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படுவது வெறும் வதந்தி மட்டுமே, கட்சியை மீட்பேன் என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனையில் அரசு அலட்சியமாக செயல்படுகிறது.
இந்த பிரச்சனையில் அரசு சுமூகத் தீர்வு ஏற்படுத்த வேண்டும். முதல்வர் மீதான குற்றச்சாட்டை போக்குவதற்கு போக்குவரத்துக்கழகத்துக்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும்.
தனிக்கட்சி தொடங்க மாட்டேன்
தவறான நபர்களிடம் அதிமுகவை தேர்தல் ஆணையம் ஒப்படைத்துவிட்டது. தனிக்கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படுவது வெறும் வதந்தி மட்டுமே. கட்சியை மீட்டு எடுக்கவே முயற்சி செய்து வருகிறேன்.
மக்களை சந்திப்பேன்
தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்க உள்ளேன். அதற்கான சுற்றுப்பயணம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார்.
ஆட்சிக்கு செக்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் டிடிவி தினகரன். இதனையடுத்து, பேரவை, தனி கட்சி தொடங்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் அதனை மறுத்துள்ளார் தினகரன். கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றுவதுதான் தினகரனின் ஒரே குறிக்கோளாகவும் உள்ளது.
ஓபிஎஸ், ஈபிஎஸ்
டிடிவி தினகரனின் வெற்றி அதிமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தினாலும் தினகரனுக்கு செக் வைக்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள், ஸ்லீப்பர் செல்களை நீக்கி வருகின்றனர். ஆனாலும் அசராமல் ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு எதிராக பேட்டி கொடுத்து வருகிறார் டிடிவி தினகரன்.