சகிப்புத்தன்மை விவகாரம்... தேசிய விருதை திரும்ப ஒப்படைக்கமாட்டேன்: கமல்
மும்பை: சகிப்புத்தன்மை குறைந்து வருவதல் போன்ற விவகாரங்களுக்காக தேசிய விருதை திரும்ப ஒப்படைக்கப் போவதில்லை; அப்படி ஒப்படைப்பதால் எந்த பயனும் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
தாத்ரியில் இஸ்லாமிய முதியவர் படுகொலை, எழுத்தாளர்கள் கல்பர்கி உள்ளிட்டோர் படுகொலை, புனே திரைப்பட கல்லூரி மாணவர்கள் போராட்டம் ஆகியவற்றை முன்வைத்து எழுத்தாளர்கள், திரைப்பட கலைஞர்கள் தங்களுக்கு மத்திய அரசு வழங்கிய விருதுகளை திரும்ப ஒப்படைத்து வருகின்றனர்.
இது குறித்து நடிகர் கமல்ஹாசன் இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
விருதுகளைத் திருப்பித் தருவது என்பது ஒரு பயனற்ற செயல். சகிப்புத்தன்மை குறைந்து வருவதை அறிவுப்பூர்வமாகத்தான் தோற்கடிக்க வேண்டும்.
விருதுகளை திருப்பித் தருவதால் எந்த ஒரு தாக்கமும் ஏற்படாது. விருதுகளை திருப்பிக் கொடுப்பது என்பது அரசை அவமதிப்பதாகும். சகிப்புத்தன்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் கட்டுரைகள், திரைப்படங்களை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடிகை வித்யாபாலனும் கூட, மக்கள் அளித்த விருதை அரசிடன் திருப்பித் தர முடியாது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.