சேச்சே நான் வடிவேலு மாதிரியெல்லாம் பேச மாட்டேன்.. சொல்வது இமான் அண்ணாச்சி!
சென்னை: அடுத்த வடிவேலு.. இமான் அண்ணாச்சியை இப்படித்தான் இப்போது பலரும் வர்ணிக்க ஆரம்பித்து விட்டனர். கடந்த சட்டசபைத் தேர்தலின்போது தீவிரமாக திமுகவுக்காக பிரசாரம் செய்து பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியவர் வடிவேலு. ஆனால் அதன் பிறகு அவர் முற்றிலுமாக திரையுலகில் ஓரம் கட்டப்பட்டு விட்டார். இன்று வரை அவரால் எழுந்திருக்க முடியவில்லை.
இப்போது இமான் அண்ணாச்சி கிளம்பி வந்துள்ளார். காமெடி நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகி, திரையுலகிலும் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் இமான் அண்ணாச்சி.
அவரது காமெடிப் பேச்சுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள். இந்த ரசிகர் கூட்டத்தையே பெரும் பலமாக கருதி, திமுகவில் இணைந்துள்ளார் இமான் அண்ணாச்சி. இது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
மக்கள் டிவியில் அறிமுகமாகி
உண்மையில் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இமான் அண்ணாச்சி மக்கள் டிவியில் கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை என்ற காமெடி நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித் பின்னர்தான் பிரபலமானார்.
அப்படியே சன்னுக்கு
இதில் கிடைத்த பிரபலத்தைத் தொடர்ந்து சன் டிவிக்கு மாறினார். அங்கு சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சியை (கொஞ்சம் அரட்டையின் மறு ரூபம்தான் இது) நடத்த ஆரம்பித்த பின்னர் மேலும் புகழ் கூடியது. கூடவே குட்டி சுட்டீஸிலும் கலக்க ஆரம்பித்தார்.
சினிமாவிலும்
இந்த நிகழ்ச்சிகளின் பிரபலத்தால் சினிமாவிலும் முக்கிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கூடி வந்தது. விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் என கலக்க ஆரம்பித்தார்.
இப்போது அரசியலில்
இந்த நிலையில்தான் தற்போது அரசியலுக்கு வந்துள்ளார். ஆனால் இவருக்கு திமுக புதிதல்ல. இவரது குடும்பத்தினர் பலரும் திமுகவினர்தான். இவரது சித்தப்பாதான் பிரபல பாதிரியார் எஸ்றா சற்குணம்.
அவரே சொல்வதைக் கேளுங்க..
திமுகவில் திடீரென சேர்ந்தது குறித்து விவரித்துள்ளார் இமான் அண்ணாச்சி ஒரு பேட்டியில். அதில் அவர் கூறியிருப்பதாவது: 13 வருடங்களாக தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்தேன். மக்கள் தொலைக்காட்சி மூலம் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானேன்.
புகழின் உச்சி
சொல்லுங்கண்ணே... சொல்லுங்க... நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானேன். தற்போது குட்டிச் சுட்டீஸ் நிகழ்ச்சி என்னை புகழின் உச்சிக்கு கொண்டு சென்று விட்டது. சின்னக் குழந்தைகள் முதல் என்னை அடையாளம் கண்டு கொள்கின்றனர். டி.வி. நிகழ்ச்சியில் பிரபலமானதால் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் வந்தது. அதை ஏற்று பல படங்களில் நடித்துள்ளேன். இன்னும் பல படங்களில் நடித்து வருகிறேன்.
கருணாநிதியைப் பிடிக்கும்
சிறு வயதில் இருந்தே கருணாநிதியின் சினிமா வசனத்தை விரும்பி கேட்பேன். உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்ட காலங்களில் அவரது வசனத்தை திரும்ப திரும்ப கேட்டு பசியை கூட மறந்திருக்கிறேன். கருணாநிதியை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பினேன். அதற்காக நேரம் கேட்டு காத்திருந்தேன். அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நேரில் சந்தித்து பேசிய போது திமுகவில் இணைந்து பணியாற்றுமாறு கட்டளையிட்டார்.
கட்டளையை ஏற்று கட்சிக்கு
அவரது கட்டளையை ஏற்று திமுகவில் இணைந்து விட்டேன். எனக்கு உறுப்பினர் அட்டையை கொடுத்தார். அவர் தேர்தல் பணியில் தீவிரமாக இருக்கிறார். எனவே அவரிடம் கொஞ்ச நேரம் மட்டுமே பேச முடிந்தது. இனி மு.க.ஸ்டாலினை சந்தித்து விரிவாக பேச திட்டமிட்டுள்ளேன். அதன் பிறகு திமுகவுக்காக பிரசாரம் செய்ய உள்ளேன்.
வடிவேலு மாதிரியெல்லாம் பேச மாட்டேன்
பிரசாரத்தின் போது வடிவேலு போல தேவையில்லாத வார்த்தைகளை பயன்படுத்த மாட்டேன். எதையும் நிதானமாக அளந்துதான் பேசுவேன். தனி நபரை தாக்கும் வகையில் எனது பிரசாரம் இருக்காது. ஆபாசமாகவும் பேச மாட்டேன். கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரிடம் ஆலோசனை கேட்டு அவர்களின் அறிவுரையின் படி பிரசாரம் செய்வேன்.
நான் பேசினால் எடுபடும்
எனது பேச்சையும் கருத்தையும் டி.வி. மூலமும், சினிமா மூலமும் பொது மக்கள் ரசிக்கிறார்கள். குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், இளைஞர்கள் ஆகியோரும் விரும்பி கேட்கின்றனர். அதனால் எனது பிரசாரம் மக்களிடம் எளிதாக எடுபடும்.
கொடுக்கும் பணத்தை வாங்கிக்குவேன்
பிரசாரத்துக்காக இவ்வளவு பணம் வேண்டும் என்று நான் வற்புறுத்த போவதில்லை. எனது உழைப்புக்கு ஏற்ப கிடைப்பதை வாங்கிக் கொள்வேன். எனக்கும் குடும்பம் இருக்கிறது. சினிமா வாய்ப்புகளை உதறித் தள்ளி விட்டுதான் பிரசாரத்துக்கு போக வேண்டும்.
போட்டியிட மாட்டேன்
எனக்கு அரசியல் மீது பதவி மீது ஆசை இல்லை. எனவே தேர்தலில் போட்டியிடமாட்டேன். இணைந்த கைகள் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். நலிந்த குடும்பத்தினருக்கு தொழில் செய்ய உதவி, கல்வி நிதி உதவி போன்றவற்றை அதன் மூலம் வழங்கி வருகிறேன் என்றார் அவர்.
மறக்க முடியாத வடிவேலு
இமான் அண்ணாச்சியைப் பார்க்கும்போது கண்டிப்பாக வடிவேலு நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது. காமடியில் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. விஜயகாந்த்துக்கு எதிராகவும், அதிமுகவுக்கு எதிராகவும் பிரசாரம் செய்வதற்காக மு.க.அழகிரியால் கொண்டு வரப்பட்டார் வடிவேலு.
விஜயகாந்த்தைக் குறி வைத்து
அப்போது விஜயகாந்த்துக்கும், வடிவேலுவுக்கும் பிரச்சினை இருந்தது. இதனால் தனது பிராசரத்தில் விஜயகாந்த்தைக் குறி வைத்து கடுமையாக பேசினார் வடிவேலு. அவரது பேச்சுக்கு பெரும் ஆதரவு கிடைத்தது.
பொழப்பு போச்சு
ஆனால் நேரமோ என்னவோ தேர்தலில் திமுக படு தோல்வி அடைந்தது. அதிமுக ஆட்சியைப் பிடித்தது. தேமுதிகவோ எதிர்க்கட்சியானது. திரையுலகில் இடத்தை இழந்தார் வடிவேலு. இன்று வரை அவரை இழந்து நிற்கிறார்கள் ரசிகர்கள்.
அவரது இடம் அப்படியே
இன்று வரை வடிவேலுவின் காமெடிக்கு இணையான காமெடியன் யாரும் வரவில்லை. இருப்பினும் சந்தானம், சூரி என பலரும் வளர்ந்து காமெடியே மாறிப் போய் நிற்கிறது. ஆனால் வடிவேலு ஸ்டைலை மக்கள் இழந்தது இழந்ததாகவே உள்ளது.
நமக்கு நாமே கன்ட்ரோலா இருந்தா நல்லது!
வடிவேலு மாதிரி பேச மாட்டேன் என்று சொல்கிறார் இமான் அண்ணாச்சி. ஆனால் வடிவேலு அன்று அப்படிப் பேசியபோது திமுக அவரை தடுக்கவில்லை, மாறாக பேச விட்டு வேடிக்கைதான் பார்த்தது. இதோ இப்போது இமான் அண்ணாச்சி வரப் போகிறார்.. என்னாகப் போகிறதோ!