அமைச்சர்களை கோர்ட்டில் நிறுத்தி குறுக்கு விசாரணை நடத்துவேன்.. ஈவிகேஎஸ் அதிரடி
சென்னை: என் மீது குற்றம் சுமத்தியுள்ள அமைச்சர்களை நேரில் கோர்ட்டுக் வரவழைத்து, அவர்கள் மீதான குற்றச் சாட்டுக்களை எல்லாம் ஆதாரங்களுடன் குறுக்கு விசாரணை செய்வேன் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக கூறியிருந்தார் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
அதேபோல், சுகாரத்துறை அதிகாரி தற்கொலையில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் தொடர்பிருப்பதாகவும் இளங்கோவன் பேட்டி அளித்திருந்தார்.
இதனால், இளங்கோவன் மீது அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் தனித்தனியாக கிரிமினல் அவதூறு வழக்குகளை சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
இதில் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில், ‘என் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக ஒரு நாளிதழுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவதூறாக பேட்டி அளித்துள்ளார். இது ஆதாரமற்ற குற்றச் சாட்டாகும். இளங்கோவன் தெரிவித்த அவதூறு கருத்தினால், சமுதாயத்தில் எனக்குள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல், அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவில், ‘சுகாதாரத்துறை அதிகாரி தற்கொலை தொடர்பாக என்னை பற்றி அவதூறான தகவல்களுடன் பத்திரிகைக்கு இளங்கோவன் பேட்டிக் கொடுத்துள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்.
இந்த இரண்டு அவதூறு வழக்குகளிலும் நேரில் ஆஜராகி, வழக்கு ஆவணங்களைப் பெற்றுச் செல்ல வேண்டும் என கடந்தமாதம் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட் இளங்கோவனுக்குச் சம்மன் அனுப்பி இருந்தது.
அதன் அடிப்படையில் இன்று கோர்ட்டில் நேரில் ஆஜரானார் இளங்கோவன். அப்போது அவரிடம் வழக்கு நகல்கள் வழங்கப்பட்டன. பின்னர், இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 20ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஆதிநாதன் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
இந்த ‘அமைச்சர்கள் மீது தலா ஒரு குற்றச்சாட்டுத்தான் கூறினேன். அதற்கே என் மீது அவதூறு வழக்குகளை தாக்கல் செய்து விட்டனர். அந்த அமைச்சர்களுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் கொண்ட பட்டியல்களே உள்ளது. அவற்றை எல்லாம் வெளியிடுவேன்.
இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன். இந்த வழக்கில், என் மீது குற்றம் சுமத்தியுள்ள அமைச்சர்களை நேரில் கோர்ட்டுக் வரவழைத்து, அவர்கள் மீதான குற்றச் சாட்டுக்களை எல்லாம் ஆதாரங்களுடன் குறுக்கு விசாரணை செய்வேன். அவர்கள் பதிலளிக்கட்டும்' எனத் தெரிவித்தார்.