சட்டசபையில் நான் நினைத்தால் பெரும்பான்மையை எளிதாக நிரூபிப்பேன்..சசிகலா புஷ்பா பொளேர்
சட்டசபையில் தம்மால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும்; அதிமுக எம்.எல்.ஏக்கள் தம்மையே ஆதரிப்பார்கள் என அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்பி சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
சென்னை: சட்டசபையில் தாம் நினைத்தால் பெரும்பான்மையை எளிதாக நிரூபிக்க முடியும் என்று அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா அதிரடியாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டவர் சசிகலா. அதேநேரத்தில் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக நாடாளுமன்ற செயலருக்கு அதிமுக கடிதம் அனுப்பவில்லை.
இதனால் தொடர்ந்தும் ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி.யாக அவர் இருந்து வருகிறார். ஜெயலலிதா மறைந்தது முதலே சசிகலா குடும்பத்துக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி வருகிறார் சசிகலா புஷ்பா.
அமைதியாக இருக்கும் சசிகலா புஷ்பா
ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கியபோது அவருடன் சசிகலா புஷ்பாவும் கை கோர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 6 மாத காலமாக எந்த ஒரு கோஷ்டியிலும் இணையாமல் டெல்லிக்கும் தமிழகத்துக்குமாக பறந்து கொண்டிருக்கிறார் சசிகலா புஷ்பா.
யாரையும் மக்கள் ஏற்கவில்லை
இந்நிலையில் சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு சசிகலா புஷ்பா அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய எந்த ஒரு தலைவருமே இல்லை. அதிமுக தற்போது 4 கோஷ்டிகளாக பிரிந்து நிற்கிறது.
நானும் மனு தாக்கல்
தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி பெயருக்கு உரிமை கோரி 4 கோஷ்டியும் மனுத்தாக்கல் செய்திருக்கிறது. இதில் அதிமுக பொதுச்செயலர் தேர்தலின் போது நடந்த வன்முறைகளை சுட்டிக்காட்டி ஒரு மனு கொடுத்திருக்கிறேன்.
சட்டசபையில் பெரும்பான்மை
எனக்குப் பின்னால் எத்தனை எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர் என்பதைவிட நான் நினைத்தால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். ஆனால் இப்போது ராஜ்யசபா சபா எம்.பியாக பணியாற்றுகிறேன். இந்த பதவிகாலம் முடியும் வரை காத்திருக்கலாம் என நினைக்கிறேன்.
எனக்கு முக்கியத்துவம்
ஜெயலலிதா இருந்தபோதே அவருக்கு அடுத்த நிலையில் எனக்கு இடம் தந்திருந்தார். இன்று அதிமுக மூத்த நிர்வாகிகளாக இருப்பவர்கள், மூத்த அமைச்சர்கள் பலர் மீதான புகார்கள் குறித்து என்னைத்தான் விசாரிக்க சொல்லியிருந்தார். என் மீது நம்பிக்கை இருந்ததால்தான் நாடாளுமன்ற செயலருக்கு என்னை கட்சியில் இருந்து நீக்கும் அறிக்கையை அவர் அனுப்பி வைக்கவில்லை.
இவ்வாறு சசிகலா புஷ்பா கூறினார்.