நீங்க எம்ஜிஆர் படம் திறக்கலாம்; நாங்கள் ஜெ. படத் திறப்பை ஆதரிக்கக் கூடாதா? சீறும் விஜயதாரணி
ஜெயலலிதா படத் திறப்பிற்கு ஆதரவு தெரிவித்தது குறித்து விஜயதாரணிக்கும், திருநாவுக்கரசருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை : 'அவர் மட்டும் சத்தியமூர்த்தி பவனில் எம்.ஜி.ஆர் படத்தை திறக்கலாம். ஆனால், நாங்கள் மட்டும் ஜெயலலிதா படத்திறப்பு விழாவிற்கு ஆதரவு தெரிவிக்கக்கூடாதா ?' என்று திருநாவுக்கரசருக்கு எதிராக எம்.எல்.ஏ விஜயதாரணி கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திறப்புக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி ஆதரவு தெரிவித்தது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தில் விஜயதாரணிக்கும் , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆதரவு தெரிவித்த விஜயதாரணி
முன்னதாக சட்டசபையில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா படம் திறக்கும் நிகழ்ச்சியை தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன. ஆனால், காங்கிரஸ் கட்சி சட்டசபைக் கொறடா விஜதாரணி எம்.எல்.ஏ. மட்டும் சட்டசபையில் ஜெயலலிதா படம் திறக்க வரவேற்பு தெரிவித்தார். ஆனால் படத்திறப்பு நிகழ்ச்சியில் விஜயதாரணி கலந்து கொள்ளவில்லை. அதன்பிறகு விஜயதாரணி அளித்த பேட்டியில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ராகுல்காந்தி பார்த்தார், இறுதிச்சடங்கில் கடைசிவரை கலந்து கொண்டார். அப்போதெல்லாம் ஜெயலலிதா குற்றவாளி என்பது தெரிவில்லையா? என கருத்து தெரிவித்து இருந்தார்.
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி பற்றிய விஜயதாரணியின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கடும் எதிர்ப்பும் கண்டனம் தெரிவித்ஹ்டார். அவர் கூறுகையில், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதெல்லாம் தீர்ப்பு வரவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பின்புதான் தீர்ப்பு வந்தது. அகில இந்திய தலைவரான ராகுல்காந்தியை எம்.எல்.ஏ.வாக இருக்கும் விஜதாரணி எப்படி கேள்வி எழுப்பலாம் என்றார். மேலும் விஜதாரணியின் பேட்டி குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மேலிடப் பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக் ஆகியோருக்கு திருநாவுக்கரசர் கடிதம் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
இதில் தவறு ஏதும் இல்லை
இந்நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஜயதாரணி , நான் ராகுல்காந்தி குறித்து எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை. ஜெயலலிதா உடல்நலம் தொடர்பாக மருத்துவமனைக்கு வந்து விசாரித்தார் என்றும், இறுதிச்சடங்கில் பங்கேற்றார் என்றும் ராகுல்காந்தியின் பண்பைப் பாராட்டித்தான் பேசினேன். நான் வரம்பு மீறியதாக திருநாவுக்கரசர் கூறுகிறார். எந்த வகையில் வரம்பு மீறினேன் என்று தெரியவில்லை. நான் என்ன சத்தியமூர்த்தி பவனிலா ஜெயலலிதா படத்தை திறக்கச் சொன்னேன்?
விளக்கம் அளிக்கத் தயார்
திருநாவுக்கரசர் மட்டும் எம்.ஜி.ஆர். படத்தை சத்தியமூர்த்தி பவனில் திறந்தார். வரம்பு மீறியவர் அவரா? நானா? இவரது வீட்டில் வாஜ்பாய், எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் படத்தை வைத்திருக்கிறார். அவர் கடந்து வந்த பாதையை மறக்காமல் மரியாதைக்காக வைத்திருக்கிறார். சொந்த விருப்பம் வேறு, கட்சி செயல்பாடு வேறு. எனவே கடந்த காலத்தையும் பார்க்க வேண்டும். திருநாவுக்கரசர் கடந்த காலத்தை மறக்காமல் அவர் மதிக்கும் தலைவர்களுக்கு மரியாதை செலுத்துகிறார். இதனால் காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் சரியாக செயல்படவில்லை என்று கூற முடியுமா? இதுகுறித்து கட்சி மேலிடத்திற்கு விளக்கம் அளிக்க நான் தயாராக உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.