எத்தனை கேஸ் போட்டாலும் தைரியமாக சந்திப்போம்.. முத்தரசன் அதிரடி
தன்மீது போடப்பட்ட வழக்கை சட்டப்படி சந்திப்பதாக முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: துப்பாக்கி சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் சந்திக்காதது கண்டிக்கத்தக்கது என்றும் தன்மீது போலீசார் போடப்பட்ட வழக்கினை சட்டப்படி சந்திப்பேன் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் மக்களின் எழுச்சி போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தினால் நாடே கொந்தளித்து வருகிறது. பல தரப்பில் போராட்டங்கள், மறியல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தலைவர்கள் பலர் தங்களது ஆதங்கத்தையும், கோபத்தையும் அறிக்கைகளாக பதிவு செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் தொடர்ந்து கலவரத்தின் பிடியில் சிக்கி வருகிறது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இறந்தவர்களின் குடும்பங்களின் ஆறுதல் சொல்வதற்காகவும், காயம் அடைந்தவர்களை நேரில் சந்திப்பதற்காகவும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இலட்சிய திமுக கட்சி தலைவர் டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் தூத்துக்குடி சென்று பொதுமக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இதில் தலைவர்கள் திருமாவளவனும், திருநாவுக்கரசரும் தூத்துக்குடி செல்லும்முன் சென்னை விமான நிலையத்தில்1 மணி நேரம் காக்க வைக்கப்பட்ட நிகழ்வும் நடைபெற்றது.
இந்நிலையில், தூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறி அதிக வாகனங்களில் சென்றதாக மு.க.ஸ்டாலின், வைகோ, முத்தரசன், திருநாவுக்கரசர், திருமாவளவன், கமல், வாசன், டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கூறி 143, 188 மற்றும் 153(ஏ) பிரிவுகளின் கீழ் தென்பாகம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன், துப்பாக்கி சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பவர்களை நேரில் சந்திப்பது முதலில் அரசியல் கட்சி தலைவர்களின் கடமை ஆகும் என்றார். ஆனால் காயம் அடைந்தவர்களை அமைச்சர்கள் யாரும் சந்திக்காதது கண்டிக்கத்தக்கது என தெரிவித்த முத்தரசன், 144 தடை உத்தரவை மீறியதாக தன் மீது போடப்பட்டுள்ள வழக்கினை சந்திக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.