மதுவுக்கு எதிராக போராட மாணவர்களை மீண்டும் தூண்டுவேன்... ராமதாசுக்கு வைகோ பதிலடி
சென்னை : மதுவுக்கு எதிராகவும், மது விலக்குக்கு ஆதரவாகவும் மாணவர்களை மீண்டும் தூண்டுவேன் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பதிலடி கொடுத்துள்ளார்.
மார்த்தாண்டத்தில் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சசிபெருமாள் பலியானதையடுத்து மது விலக்கு விவகாரம் மேலும் விஸ்வரூபமெடுத்துள்ளது.
அவரது மரணத்தைத் தொடர்ந்து ஆங்காங்கே டாஸ்மாக் கடைகள் தாக்கப்படுவதும், பல்வேறு போராட்டங்களும் தமிழகத்தில் அரங்கேறி வருகின்றன.
அண்மையில் கலிங்கப்பட்டியில் மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ தலைமையில் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. போராட்டம் நடைபெற்ற இடம் அருகே இருந்த டாஸ்மாக் கடையை போராட்டக்காரர்கள் சூறையாடினர்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள டாஸ்மாக் கடையை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சூறையாடியபோது போலீசார் நடத்திய தடியடிக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், மதுக்கடைக்களுக்கு எதிராக மாணவர்களை வைகோ தூண்டிவிடுவதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்து பதிலளித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ மதுவுக்கு எதிராக மாணவர்களை மீண்டும் தூண்டி விடுவேன் என்று ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், தமிழக அரசியல் வரலாற்றில் ஆகஸ்ட் 4 ம் தேதி மிகவும் முக்கியமான நாள். டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தை நான் தான் தூண்டினேன்.
மாணவர்கள் புரட்சி வந்தால் மட்டுமே அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும். கலிங்கப்பட்டியில் நடந்த வன்முறைக்கு தமிழக முதலமைச்சர் தான் காரணம். முதல்வர் தூண்டுதல் காரணமாகத்தான் தம்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. சசிபெருமாள் மரணத்திற்கு அ.தி.மு.க., அரசு தான் காரணம் என்றும் வைகோ கூறினார்.