ஆதாயத்துக்காக அணியைத் தேடக் கூடாது - அதிமுக கோஷ்டிகள் இணைய வேண்டும்: நடிகை விந்தியா பரபர பேட்டி
ஜெயலலிதாவின் சமாதியில் பேசிய அதிமுக நட்சத்திர பேச்சாளர் விந்தியா சுயநல ஆதாயத்துக்காக அணியைத் தேடக் கூடாது. இரு அணிகளும் சேர வேண்டும் என கூறினார்.
சென்னை: இரண்டு அணிகளும் இணைய வேண்டும். ஆனால் ஏன் இணைய வேண்டும் என்கிற காரணம் மிக முக்கியம். ஆதாயத்துக்காக அணியைத் தேடக் கூடாது என அதிமுக நட்சித்திர பேச்சாளர் நடிகை விந்தியா கூறினார். அவர் ஜெயலலிதாவின் சமாதியில் மாம்பழங்களை வைத்து வணங்கி அதை அங்கிருந்த பொதுமக்களுக்கு வழங்கினார்.
அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் நடிகை விந்தியா, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் ஜெயலலிதாவின் சமாதியில் தன் தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களை வைத்து வணக்கி அதை பொதுமக்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நான் எப்போதும் போயஸ் கார்டன் சென்று என் தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களை ஜெயலலிதாவுக்குக் கொடுப்பேன். அவர் இப்போது கடற்கரையில் உள்ளதால் இங்கு வந்து கொடுக்கிறேன். பொதுமக்களுக்கு மாம்பழங்களைக் கொடுத்தால் அது மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஜெயலலிதாவுக்கு கொடுப்பதற்கு சமம்.
அதிமுக என்கிற இயக்கம் புரட்சித்தலைவி அதிமுக அம்மா அணி, அதிமுக அம்மா அணி என இரண்டாகப் பிரிந்துள்ளது. ஆட்சியில் இருக்கும் அணியில் சேர வேண்டுமா? அல்லது உரிமை இருக்கும் அணியில் சென்று சேர வேண்டுமா என்று நான் அலைபாய விரும்பவில்லை. ஆதாயம் தேடுகிறவர்கள் தான் அணியைத் தேடுவார்கள். எனக்கு ஜெயலலிதா கொடுத்த அடையாளம் போதும்.
ஜெயலலிதா இறந்த துக்கத்தால் நான் மனதளவில் அடிபட்டுக் கிடந்தேன். அதனால் நான் ஒதுங்கி இருந்தேன். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த சோகத்தில் இருந்து மீண்டு வருகிறேன். இரண்டு அணிகள் இணைவது முக்கியம். ஆனால் ஏன் இணைய வேண்டும் என்பது முக்கியம். பசுக்கள் தனியாக இருந்தால் சிங்கம் அவற்றை எளிதாக வேட்டையாடும். ஆனால் அந்த சிங்கமே தனையாக இருந்தால் சிறு நரி கூட மோதிப் பார்க்கும். இரட்டை இலை என்பது சின்னம் இல்லை. ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணம்.
ஆகையால் நான்கு ஆண்டு கால ஆட்சிக்காக இல்லாமல் நானூறு ஆண்டுகள் ஆனாலும் கட்சியும் அம்மாவும் மக்கள் மனதில் இருப்பதற்காக இரு அணிகளும் இணைய வேண்டும் என்பது என் விருப்பம். ஜெயலலிதாவுக்கு நான் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன். அதனைக் காப்பாற்ற என் கடசி மூச்சு இருக்கும்வரை கட்சிக்காக உழைப்பேன்
இவ்வாறு விந்தியா மிக உணர்வுபூர்வமாகப் பேசினார்.