ஜெ. இறந்த நாளில் ஜேம்ஸ்பாண்ட் கோட்டுடன் திரிந்தார் சசிகலா.. அழவே இல்லை: பி.எச். பாண்டியன்
சென்னை: பி.ஹெச்.பாண்டியன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: டிசம்பர் 5ம் தேதி இரவு ஜெயலலிதா மரணமடைந்ததாக அறிவிக்கபட்ட தினத்தில் மாலையில் அவருக்கு ஹார்ட்அட்டாக் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த தகவல் வந்ததும், நாங்கள் மருத்துவமனைக்கு ஓடினோம். ஆனால், அப்பல்லோ மருத்துவமனையில் ஜேம்ஸ்பாண்ட் கோட்டுடன் சசிகலாவும் அவரது, உறவினர்களும் ஆதிக்கம் செலுத்தினர். அதை நான் உட்பட பலரும் பார்த்தோம்.
அவர்கள் ஒருவரின் கண்களிலும் கண்ணீர் இல்லை, கவலையில்லை. இதையும் நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம். சசிகலா தலைமையிலான அதே கோஷ்டி இன்னும் மூளைச்சாவடையவில்லை. எனவே எய்ம்ஸ் டாக்டர்களை அழைத்து வந்து ஜெயலலிதாவை உயிர்ப்பித்துவிடுவோம் என்று எங்களிடம் உறுதியளித்தனர். இதை கேட்டு நாங்கள் மகிழ்ந்தோம். ஆனால் சிறிது நேரத்தில் ஜெயலலிதா இறந்துவிட்டதாக அறிவித்தனர். உடனே நான் உட்பட தலைமை கழக நிர்வாகிகள் 150 பேரும் ஐசியூவுக்கு விரைந்து சென்றோம்.
தலைமைச் செயலாளர்கள், போலீசார், நர்சுகள் கூட ஜெயலலிதா உடலை பார்த்தனர். உளவுத்துறை எஸ்.பியை அணுகி, நாங்கள் எல்லோரும் அம்மாவை பார்க்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தோம். ஆனால் அவர் அனுமதிக்க மறுத்தார். எல்லோரும் கீழ் தளத்திற்கு செல்லுங்கள். ஆம்புலன்சில் உடலை ஏற்றும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினார். ஆனால் நானோ உடனே பார்க்க வேண்டும் என்று அவரிடம் சண்டை போட்டேன். இதன்பிறகு அவர் ஒப்புக்கொண்டார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த அந்த அதிகாரி, ஜெயலலிதா உடலை எம்பால்மிங் செய்ய 4 மணி நேரம் ஆகிவிடும் என்றார். நாங்கள் நகராமல் அங்கேயே இருந்தோம்.
2 மணி நேரம் கழித்து ஜெயலலிதா உடலை வெளியே கொண்டு வந்தனர். நாங்கள் பார்த்தோம். ஆனால் வேகவேகமாக லிப்ட்டில் ஜெயலலிதா உடலை அகற்றி கொண்டு சென்றுவிட்டனர். பிறகு ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டபோதுதான் அவரது உடலை பார்க்க முடிந்தது. உடலை பார்த்தபோது எங்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் 2012ல் ஜெயலலிதாவால், கட்சியை விட்டு நீக்கப்பட்ட சசிகலா குடும்பத்தார் அங்கே சூழ்ந்து நின்றனர். இவ்வாறு பி.ஹெச்.பாண்டியன் தெரிவித்தார்.