அப்படியே 'சப்'புன்னு அடிச்சிருப்பேன்.. குஷ்பு பாய்ச்சல்!
சென்னை: நக்மா இடத்தில் நான் இருந்திருந்தால், முத்தமிட வந்த நபரை அப்படியே, அதே இடத்தில் அடித்திருப்பேன் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
நடிகை நக்மா காங்கிரஸ் கட்சி சார்பில் மீ்ரட் தொகுதியில் லோக்சபாதேர்தலில் போட்டியிடுகிறார்.
சமீபத்தில் அவர் உ.பி. மாநிலத்தில் தனது தொகுதியில் பிரசாரம் செய்யச் சென்றபோது அவரது கட்சியைச் சேர்ந்த வயதான ஒரு எம்.எல்.ஏ, நக்மா முகத்தை இழுத்துப் பிடித்து கன்னத்துக்கு அருகே போனதால் சலசலப்பு ஏற்பட்டது.
அந்த எம்.எல்.ஏவின் கையை நக்மா வேகமாக தட்டி விட்டு தனது பிரசார வாகனத்திற்குப் போனார். பின்னர் இதுகுறித்து அவர் கூறுகையில், இதெல்லாம் ஒரு பெரிய விஷயமில்லை என்று விளக்கியிருந்தார்.
நக்மா விவகாரம்.. குஷ்பு கருத்து
இந்த நிலையில் நக்மா விவகாரம் குறித்து அவரைப் போலவே அரசியலில் ஈடுபட்டுள்ள நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.
நானாக இருந்திருந்தால்
இதுகுறித்து குஷ்பு கூறுகையில், நக்மா அந்த நபரை நிச்சயம் அடித்து இருக்க வேண்டும். நானாக இருந்தால் அடித்து இருப்பேன்.
என்னை விட நக்மா மூத்தவர்
அரசியலில் நக்மா என்னை விட மூத்தவர். இதையெல்லாம் எப்படி கையாள வேண்டும் என்பது அவருக்கு தெரியும்.
எனக்கு அப்படி நேரவில்லை
அதிர்ஷ்டவசமாக இத்தகைய நிலை எனக்கு இதுவரை ஏற்படவில்லை. தி.மு.க.வில் என்னை போன்ற தொண்டர்கள் மிகுந்த பாதுகாப்புடன் உள்ளோம் என்று கூறியுள்ளார் குஷ்பு.
சென்னை கூட்டத்தில்
இருப்பினும் நடிகை குஷ்பு சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்ட கூட்டத்திற்குப் போனபோது அவரிடம் சில தொண்டர்கள் சில்மிஷமாக நடந்து கொள்ள முயற்சித்ததாக முன்பு செய்திகள் வெளியாகின என்பது நினைவிருக்கலாம்.