தண்ணீரீல் ஓடும் பேருந்துகள்... சாலைகளில் பயணிக்கும் படகுகள்... மழை உணர்த்திய பாடம் என்ன?
சென்னை: வஞ்சகமின்றி பெய்த கனமழையால் சென்னையில் ஏரிகளும், குளங்களும் நிரம்பியுள்ளன, எங்கு பார்த்தாலும் தண்ணீர் மயம்... ஆனால் சென்னை புறநகர்வாசிகளுக்கோ குடிக்க தண்ணீர் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பேருந்துகள் தண்ணீரில் ஊர்ந்து போக... சாலைகளில் வெள்ளத்தில் படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு வரும் பரிதாப காட்சிகளையும் காண முடிகிறது.
தொடர் மழை காரணமாக சென்னை மாநகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. திரும்பிய திசை எல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சென்னையின் தெற்குப்பகுதி தனித்தீவாகவே மாறிவிட்டது. நகரின் பெரும்பாலான இடங்களில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
நகர் பகுதிகளில் ஆற்றின்கரையோரம் குடிசைகளில் வசிப்பவர்களின் நிலை மட்டுமல்ல புறநகர் பகுதிகளில் பல லட்சம் செலவு செய்து வீடுகட்டியவர்களும், ப்ளாட் வாங்கியவர்களின் நிலையும் இன்றைக்கு அந்தோ பரிதாபமாக இருக்கிறனது. வெள்ளம் வந்திருக்கு தண்ணியில பாம்பு வருதே என்று புலம்பவர்களின் நிலை அந்தோ பரிதாபமாக இருக்கிறது.
நகர்பகுதிகளில் அரசியல் கட்சியினர் சமைத்த உணவு வழங்கி ஒரு வழியாக நிலைமையை சமாளிக்கின்றனர் ஆனால், உணவுக்குக் கூட வழியில்லாமல் தவிக்கிறார்கள் சென்னை புறநகர்வாசிகள். வீடுகளில் தண்ணீர் சூழ்ந்திருக்க... கடைகளும் மூடப்பட்டிருக்க சமைத்து சாப்பிடவும் முடியாமல், உணவு விடுதிகளிலும் வாங்கி சாப்பிட முடியாதல் தவிக்கின்றனர்.
வெள்ளம் சூழ்ந்த தலைநகரம்
எம்.எம்.டி.ஏ.காலனி, நியூ காலனி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் பெருமளவு சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். வேளச்சேரி பகுதியில் உள்ள பெரும்பாலான குடியிருப்புகள் மற்றும் முக்கிய சாலைகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன.விஜயநகர், ஏ.ஜி.எஸ்.காலணி, ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் குட்டை போல் மழை நீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
ஊருக்குள் வெள்ளம்
ஏரிகள் நிரம்பியதால் திறந்து விடப்பட்ட வெள்ளநீர் ஊருக்குள் புகுந்துள்ளதால் மழைக்கால அகதிகளாகிவிட்டனர் சென்னை புறநகர்வாசிகள். சாப்பிட எதுவுமில்லையே பசியோடு காத்திருக்கோம் என்று மொட்டைமாடியில் பரிதவிப்போடு காத்திருப்பவர்களுக்காகவே ஹெலிகாப்டர் மூலம் போடப்பட்டன உணவுப்பொட்டலங்கள்.
படகுகளில் மீட்புப்பணிகள்
கடந்த 4 தினங்களாக சீரான மின்சாரம் இல்லாததால் மிகுந்த அவதிக்குள்ளாகி வேதனையில் தவிக்கும் மக்களை மீட்பு படையினர் ரப்பர் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர். ஒருபக்கம் படகு போக... மறுபக்கம் பேருந்து போக அதை வேடிக்கையாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
விடிய விடிய மீட்புப்பணி
மழையால் மன்னிவாக்கம் லட்சுமி நகரில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏராளமான பொதுமக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு முதலில் மீட்புப் பணியில் படகுகள் ஈடுபடுத்தப்பட்டன. தற்போது மீட்புப்பணியில் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
விமானப்படை ஹெலிகாப்டர்கள்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டதன் பேரில் தாம்பரம் விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர்கள், முடிச்சூரில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆறு முறை சுற்றி வந்து உணவு பொட்டலங்களை மக்களுக்கு ஹெலிகாப்டரிலிருந்து விநியோகம் செய்தனர். மேலும், வெள்ளத்தில் சிக்கிய 22 பேரையும் மீட்டனர். இந்த பணி இன்றும் தொடர்கிறது.
களமிறங்கிய சைலேந்திரபாபு
கடலோர காவல் படை பிரிவைச் சேர்ந்த, 'மெரைன் கமாண்டோ'க்கள் மற்றும் அப்பிரிவின் தலைவர் கூடுதல் டி.ஜி.பி., சைலேந்திரபாபு ஆகியோர், வெள்ளத்தில் சிக்கிய, 200 பேரை, மிதவைப்படகுகள் மூலம் மீட்டனர். தென் சென்னையின் முடிச்சூர் பகுதியில், கூடுதல் டி.ஜி.பி., சைலேந்திரபாபு தலைமையில், மெரைன் கமாண்டோக்கள் நேற்று காலை முதல், மீட்பு பணியில் ஈடுபட்டனர். சி.டி.ஓ., காலனி பகுதியில், ஒரு வீட்டில் தவித்து கொண்டிருந்த தாய், குழந்தை உள்பட, 200 பேரை, 10 மிதவை படகுகளில் மீட்டனர்.
மழை உணர்த்தும் பாடம் என்ன?
மழை, வெள்ளம் என்று ஊடகங்களின் கூப்பாடு ஒருபுறம் இருக்க, ஏரிகள், கால்வாய்களை ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டியவர்கள் எல்லாம் இன்றைக்கு வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர். நகரைச் சுற்றிலும், உள்ளேயும் உள்ள நீர் நிலைகளை அழித்தும், நகரை விட்டு மழை நீர் வெளியேறாத அளவிற்கு நகருக்குள் இருக்கும் நீர் நிலைகளின் வரத்துக் கால்வாய்களின் ஆக்கிரமிப்பும், மழை வெள்ளத்தை தாக்குபிடிக்க முடியாத அளவிற்கு மேடாகிப் போன நீர் நிலைகளும் நகர வாழ்வை முடக்க முக்கிய காரணம்.
ஆக்கிரமிப்பின் பிடியில்
சென்னையில் இருந்த ஆயிரக்கணக்கான கண்மாய்கள், ஏரிகள் எல்லாம் காணாமல் போய் மேடாகி அவைகளும் ஆக்கிரமிப்பால் நீர்பிடிப்புத் திறன் இழந்து விட்டதன் விளைவே இன்றைய திடீர் வெள்ளத்திற்கு காரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். முறை அற்ற கட்டடங்களின் ஆக்கிரமிப்பும், நகர அமைப்பில் அக்கறை இல்லாமையுமே நகரங்கள் மழையில் மிதக்கக் காரணம். தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் முழுமையாக தூர் வாரப்பட்டிருந்தால் இந்த வெள்ளமும், உயிர், பண இழப்பும் ஏற்பட்டிருக்காது.
போக்குவரத்து முடங்க காரணம்
பல ஆயிரம் கோடிகள் கொட்டி போடப்படும் சாலையும், திட்டமிடப்படாத சுரங்கப்பாதைகளும் மழை நீரை வடிய வைப்பதற்கு பதிலாக மழை நீரை தேக்கும் குளம் போல மாறியதே போக்குவரத்து முடங்கக் காரணம்.
நீர்நிலைகள் மாயம்
சென்னையைச் சுற்றியுள்ள 19 ஏரிகள் பல்வேறுவிதமான ஆக்கிரமிப்புகளால் சென்னையை மழைக் காலத்தில் உயிர் பலி வாங்கும் இடமாக மாற்றி விட்டனர். ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிகள் வெள்ள நிவாரணம் என்ற பெயரில் செலவழிப்பதைக் காட்டிலும், மத்திய அரசாங்கமே நகரத்தில் இருக்கும் முக்கிய நீர்நிலைகளை ராணுவ பொறியியல் குழு மூலம் தூர் வாரி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வெள்ளத்தில் இருந்து மக்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.