5 பேரை பலிவாங்கிய சோமனூர் பேருத்து நிலைய விபத்து... நேரில் ஆய்வு செய்தார் ககன்தீப்சிங்பேடி!
கோவை சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்திய இடத்தில் ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி நேரில் ஆய்வு செய்தார்.
கோவை: சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து நடைபெற்ற இடத்தை விசாரணை அதிகாரி ககன்தீப் சிங் பேடி நேரில் ஆய்வு செய்தார்.
கோவை அருகே சோமனூர் பஸ் நிலைய மேற்கூரை கடந்த செப்டம்பர் 7ம் தேதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பேருந்துக்காக காத்திருந்த 20 வயது கல்லூரி மாணவி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். பேருந்து நிலைய கட்டிடம் சேதமடைந்தது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததே விபத்திற்கு காரணம் என்று மக்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு விபத்து குறித்து விசாரித்த அறிக்கை அளிக்க அரசுஉத்தரவிட்டுள்ளது. இதன்படி ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் முறைப்படி நேற்று விசாரணையைத் தொடங்கினார். இன்று சோமனூரில் விபத்து நடந்த இடத்தில் அவர் ஆய்வு செய்தார்.
அப்போது அந்தப் பகுதியில் சுற்றி கடை வைத்திருக்கும் வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம், பேருந்து நிலையம் எப்போது கட்டப்பட்டது, கட்டிடம் சீரமைக்கப்பட்டதா இல்லையா உள்ளிட்டவை குறித்து கருத்துகளை கேட்டறிந்தார்.
மேலும் இந்த கட்டிடம் சிதிலமடைந்திருப்பது குறித்து எப்போது புகார் அளிக்கப்பட்டது, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதையும் அதிகாரிகளிடம் ககன்தீப் சிங் கேட்டறிந்தார். விபத்து குறித்து முழு விசாரணை முடிந்தது 2 மாதத்திற்குள் அரசிடம் ககன்தீப்சிங் பேடி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.