சென்னை வரும் ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார்.. விசாரணை வளையத்தில் சசிகலா குடும்பம்!
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சிறப்பு வசதிகளை பெற்றது தொடர்பான வழக்கில் விசாரணை நடத்த கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் சென்னை வரவுள்ளார்.
சென்னை: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சிறப்பு வசதிகளை பெற்றது தொடர்பான வழக்கில் விசாரணை நடத்த கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் சென்னை வரவுள்ளார்.
டிஐஜி சத்திய நாராயணராவுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து சிறையில் பல்வேறு சிறப்பு வசதிகளை சசிகலா பெற்றதாக சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா குற்றம் சாட்டினார். இதைர்தொடர்ந்து சிறையில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.
விசாரணை அதிகாரி வினய்குமார் ஐஏஎஸ் நேற்று முன்தினம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 2 மணி நேரம் ஆய்வு செய்தார். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானதை தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உயர்மட்ட குழுவில் 25 பேர்
இந்த உயர் மட்ட குழுவில் 25 நபர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் குற்றவியல் துறையை சேர்ந்த அதிகாரிகள், சிறை அதிகாரிகள் சிலர், நார்கோடிக் பிரிவை சேர்ந்த அதிகாரிகள், மனோதத்துவ நிபுணர் குழு, என பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக வேலை செய்த 4 பெண்கள் உள்பட 25 நபர்களை தேர்வு செய்துள்ளனர்.
அதிகாரிகள் சென்னை வருகை
சிறையில் நடத்தப்பட்ட ஆய்வில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக விசாரணை குழுவினை சேர்ந்த அதிகாரிகள் விரைவில் சென்னைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சசிகலாவின் உறவினர்கள் உட்பட பல்வேறு நபர்களிடம் இது குறித்து விசாரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பணம் எப்படி சென்றது?
இந்த நிலையில் விசாரணை குழு சசிகலாவிற்கு ரூ.2 கோடி பணம் எங்கிருந்து சென்றது, யார் பணத்தை கொண்டு சென்றது, பணம் எந்த வங்கியில் எடுக்கப்பட்டது, யாரின் கணக்கில் வங்கிப் பணத்தை செலுத்தினார்கள், எவ்வளவு பணம் , எங்கு வைத்து கொடுக்கப்பட்டது , மேலும் இந்த பண டீலிங்கில் யார் யாரிடமிருந்து பணம் சென்றது என்பது குறித்து விசாரிக்க வினய் குமார் தலைமையிலான 5 அதிகாரிகள் மிகத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஆதாரங்களை திரட்டிய அதிகாரிகள்
இதுவரை நடத்திய விசாரணையில் பணம் சென்னையிலுள்ள தனியார் வங்கி ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட பணம் பெங்களூரில் விவேக்கிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அவர் அந்தப் பணத்தை பெங்களூருவில் வைத்து பல்வேறு அதிகாரிகளுக்கு கொடுத்துள்ளதற்கான விபரங்களை திரட்டியுள்ளனர். இதற்கான ஆதாரங்களை கைப்பற்றவும் மேலும் சென்னையில் பல்வேறு விசாரணைகளை மேற்கொள்ள மிக விரைவில் சென்னைக்கு விரைந்து வர வினய்குமார் தயாராகி வருகிறார்.