அடங்காத பாஜக அக்கப்போர்.. உளவுத்துறை கையில் அதிமுகவிடம் ஆதாயம் அடைந்த 'தலைவர்கள்' பட்டியல்!
அதிமுக அரசிடம் ஆதாயம் அடைந்த தமிழக பாஜக தலைவர்கள் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு விசாரணை நடத்துகிறது உளவுத்துறை.
சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்போம் என்று சொல்லிக் கொள்ளும் பா.ஜ.க நிர்வாகிகளின் உட்கட்சி மோதலைத் தீர்ப்பதற்கு வழிதெரியாமல் தவித்து வருகின்றனர். ஆளும் அதிமுகவுடன் நட்பு பாராட்டும் பா.ஜ.க நிர்வாகிகள் பட்டியலை மத்திய உளவுப் பிரிவு தயாரித்து வருகிறது.
தமிழிசையின் தூண்டுதலின்பேரில் இந்த அறிக்கை மேலிடத்தின் கவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. பொதுவாக அமித் ஷா கலந்து கொள்ளும் கூட்டங்கள் அனைத்தும், மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.
அப்படித்தான் சென்னையிலும் கோவையிலும் பங்கேற்க அமித்ஷா ஆயத்தமானார். ஆனால் புதிய மாநிலத் தலைவர் யார்? என்ற விவாதத்தை மறைமுகமாக ஏற்படுத்தினார் பொன்.ராதாகிருஷ்ணன். தலைவர் பதவிக்கு வானதி, ராகவன் உள்ளிட்டவர்களின் பெயர்கள் அடிபட்டன.
அமித்ஷா வருகை ரத்து
இதுகுறித்து, டெல்லியின் கவனத்துக்குப் புகார் கடிதம் அனுப்பினார் தமிழிசை. அந்தக் கடிதத்தில் உட்கட்சிக்குள் கலகத்தை உண்டாக்கி சிலர் அரசியல் செய்ய நினைக்கிறார்கள் எனக் கொளுத்திப் போட, தொலைக்காட்சி முன் நின்று பேசுவதைவிட கட்சியின் உள்கட்டமைப்பை வளர்க்கப் பாடுபடுங்கள் எனக் கண்டிப்புடன் கூறிய பா.ஜ.க நிர்வாகிகள், அமித் ஷா வருகையையும் ரத்து செய்துவிட்டனர்.
எடப்பாடியுடன் வானதி சந்திப்பு
தமிழக பா.ஜ.கவின் நடக்கும் கோஷ்டி மோதலைத்தான் டெல்லித் தலைவர்கள் அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றனர். கட்சியை வளர்ப்பதைவிடவும் மாநிலத் தலைவர் பதவியைக் கைப்பற்றும் நோக்கில் சிலர் வலம் வருகின்றனர். கடந்த வாரம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துக் கோரிக்கை மனுவைக் கொடுத்தார் வானதி.
கண்டுகொள்ளாத தமிழிசை
இதுதொடர்பாக, தமிழிசையைத் தொடர்பு கொண்டு, முதல்வரை சந்திக்கச் செல்லும்போது நீங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் எனக் கூறியிருக்கிறார் வானதி. இந்த அழைப்பை தமிழிசை ஏற்கவில்லை. வானதியையும் அவர் தடுக்கவில்லை.
நீண்ட லிஸ்ட்
அதேநேரம் கொங்கு மண்டல அ.தி.மு.க அமைச்சர்களோடு வானதி காட்டும் நெருக்கத்தையும் டெல்லியின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். குறிப்பாக, தமிழக ஆட்சியாளர்களிடம் பா.ஜ.க நிர்வாகிகள் அடையும் சலுகைகள் என்னென்ன?' என்பதைப் பற்றி ஒரு நீண்ட லிஸ்ட்டே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம்.
உளவுத்துறை விசாரணை
இதுகுறித்து மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகளும் விசாரணை நடத்தி உள்ளனர். அதில், தமிழக அரசிடம் கோரிக்கை வைக்காத பா.ஜ.க தலைவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் தமிழிசை. மற்றொருவர் மத்திய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். மற்ற அனைவருமே "வர்த்தக ரீதியான" தொடர்பில் இருக்கிறார்கள்' என தெரியவந்துள்ளது. இந்தத் தகவலை அமித் ஷாவின் பார்வைக்கும் கொண்டு சென்றுள்ளனர். அதேநேரத்தில் டெல்லியில் தமிழிசைக்கு வேண்டிய தென்மண்டல தொழிலதிபர்களுக்காக, அவர் பேசிய விவரங்களையும் நாங்கள் வெளியிடுவோம் என கொதிக்கின்றனர் பொன்னார் ஆதரவாளர்கள்.