சுவாதியை கொன்றது ராம்குமார்தானா..? உறுதி செய்ய சிறையில் நாளை அடையாள அணிவகுப்பு
சென்னை: இன்போசிஸ் ஊழியர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை கண்டுபிடிக்க, வரும் திங்கள்கிழமை அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சுவாதி கொலை வழக்கில், கடந்த 1ம் தேதி ராம்குமார் கைது செய்யப்பட்டார். கழுத்தை பிளேடால் வெட்டி தற்கொலைக்கு முயன்ற நிலையில், நெல்லை மற்றும் சென்னை அரசு மருத்துவமனைகளில் ராம்குமாருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராம்குமார். அங்கு அவரை சந்தித்த அவர் தரப்பு வழக்கறிஞர் ராம்ராஜ், ராம்குமார் மிகவும் விரக்தியில் இருப்பதாக கூறியிருந்தார்.
அடையாள அணிவகுப்பு
இந்நிலையில், புழல் சிறையில் உள்ள ராம்குமாரை திங்கட்கிழமை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நேரில் பார்த்தவர்கள்
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்தவர்கள் ராம்குமாரை அடையாளம் காட்டுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் காவல்
அடையாள அணிவகுப்புக்குப் பிறகு ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது கொலை வழக்கில் மேலும் ஆதாரங்களை திருட்டுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
உறுதி செய்ய
ராம்குமார்தான் கொன்றாரா அல்லது வேறு யாரும் கொலையில் ஈடுபட்டார்களா என்ற சந்தேகங்கள் சமீபகாலமாக காட்டு தீ போல பரவி வரும் நிலையில், அடையாள அணி வகுப்பில் நேரில் பார்த்த சாட்சியங்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.