கொடநாடு கொலை வழக்கு: குற்றவாளியை நெருங்கும் போலீஸ்.. கோவை சிறையில் அடையாள அணிவகுப்பு!
கொடநாடு கொலையில் குற்றவாளியை கண்டுபிடிக்க கோவை சிறையில் அடையாள அணிவகுப்பு நடைபெற்றது.
கோத்தகிரி: கொடநாடு கொலையில் குற்றவாளியை கண்டுபிடிக்க கோவை சிறையில் அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. கூடலூர் மாஜிஸ்திரேட் தமிழச்செல்வன் முன்னிலையில் இந்த அடையாள அணிவகுப்பு நடைபெற்றது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்து வந்த காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் அடையாள அணிவகுப்பு கூடலூர் நீதிபதி முன்பு நடத்தப்பட்டது.
கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 13 ஆண்டுகளாக காவலராக பணிபுரிந்து வந்தவர் ஓம் பகதூர். இவர் கடந்த மாதம் 24ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
கொள்ளையடிக்க வந்தவர்களா?
அவருடன் இணைந்து பணியாற்றி வந்த கிருஷ்ண பகதூர் என்பவருக்கு உடலில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கொடநாடு பங்களாவில் கொள்ளையடிக்க வந்த நபர்கள் காவலர்களை தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர் என்று கூறப்பட்டது.
பலியான ஜெ. முன்னாள் ஓட்டுநர்
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் ஏப்ரல் 28ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு குற்றவாளி சயன் ஏப்ரல் 29ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கி உயிர் தப்பினார்.
8 பேர் கைது
சயனின் மனைவி மற்றும் குழந்தைகள் அந்த விபத்தில் உயிர் இழந்தனர்.
மேலும் ஓம் பகதூர் கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் 8 பேரை கைது செய்த போலீசார் அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
அடையாள அணி வகுப்பு
இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்படும் 8 பேரின் அடையாள அணிவகுப்பு இன்று நடத்தப்பட்டது. கூடலூர் நீதிபதி தமிழ்செல்வன் முன்னிலையில் கோவை மத்திய சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. காயமடைந்த கிருஷ்ண பகதூரைக் கொண்டு இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது.