விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு: சினிமா இயக்குநர் வீ.சேகர் மீண்டும் சிறையில் அடைப்பு!
சென்னை: கோயில் சிலைத் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட இயக்குநர் வீ.சேகர், போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இது குறித்து போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டம் - ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜபுரம் மணிகண்டேஸ்வர் கோயிலில் சிவன், பார்வதி சிலைகள், திருவண்ணாமலை மாவட்டம் - வந்தவாசி அருகே உள்ள சௌந்தர்யபுரத்தில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வார், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள், பையூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் என 8 சிலைகள் கடந்த ஜனவரி மாதம் திருடப்பட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பாக திரைப்பட இயக்குநர் வீ.சேகரை போலீஸôர் கடந்த 12-ஆம் தேதி கைது செய்து, சிறையில் அடைத்தனர். சேகரிடம் சிலைத் திருட்டு தொடர்பாக பல்வேறு முக்கியத் தகவல்கள் பெற வேண்டியிருந்ததால், போலீஸார் சேகரை விசாரிக்க அனுமதி கேட்டு எழும்பூர் இரண்டாவது நீதித் துறை நடுவர் மன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரித்து, 3 நாள்கள் சேகரிடம் விசாரணை செய்ய போலீஸாருக்கு அனுமதி அளித்தது. இந்த நிலையில் சேகரை, எழும்பூர் இரண்டாவது நீதித் துறை நடுவர் மன்றத்தில் போலீஸார் புதன்கிழமை ஆஜர்படுத்தினர். அப்போது போலீஸார், சேகர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிபதி சத்யா, சேகரை நீதிமன்றக் காவலில் அடைக்கும்படி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, போலீஸார் சேகரை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.