சிலையை கடத்தி விற்ற டிஎஸ்பி காதர் பாஷாவை கைது செய்யாதது ஏன்.. ஐஜியிடம் நீதிமன்றம் சரமாரிக் கேள்வி
அருப்புக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட சிலையை கடத்திய வழக்கில் டிஎஸ்பி காதர் பாஷாவை கைது செய்யாதது ஏன் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: சிலையை கடத்தி பணத்தை பங்கு போட்டுக் கொண்ட வழக்கில் டிஎஸ்பி காதர் பாஷாவை கைது செய்யாதது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி பொன். மாணிக்கவேலிடம் கேள்வி எழுப்பியது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் ஆரோக்கியராஜ் என்பவருடைய விவசாய நிலத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, ஐம்பொன் சிலைகள் 6 கண்டெடுக்கப்பட்டன.
இந்தச் சிலைகள் சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரே தாய்லாந்து நாட்டிற்கு கடத்தினர். ஐம்பொன் சிலைகள் 6ம் 6 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது.
சிலை கடத்திய 4 போலீசார்
இந்த சிலைகள் அனைத்தும் டெல்லியில் உள்ள முகவர் மூலம் தாய்லாந்திற்கு கடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து டிஎஸ்பி காதர்பாஷா உள்ளிட்ட 4 போலீசார் மீது விசாரணை நடைபெற்று வந்தது.
சம்பவம் அம்பலம்
2008ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது பரபரப்பாகியுள்ளது. இந்த சிலை கடத்தல் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
உண்மை
இந்தக் கடத்தலில் தொடர்புடைய எஸ்பி சுப்புராஜிடம் போலீசார் நடத்தினர். அதில் சிலை விற்கப்பட்டதும், அதன் மூலம் கிடைத்த பணத்தை டிஎஸ்பி காதர்பாஷாவுடன் பகிர்ந்து கொண்டதையும் ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து சுப்புராஜ் கைது செய்யப்பட்டார்.
ஐஜி நேரில் ஆஜர்
இந்நிலையில், இது தொடர்பாக யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் நேரில் ஆஜரானார்.
சரமாரிக் கேள்வி
அப்போது, சிலை கடத்தலில் தொடர்புடைய டிஎஸ்பி காதர் பாஷாவை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சாதாரண மனிதர் இப்படி செய்தால் விட்டு வைப்பீர்களா என்றும் நீதிமன்றம் ஐஜி பொன். மாணிக்கவேலிடம் சரமாரி கேள்வி கேட்டது.