18 எம்எல்ஏக்களும் வழக்கை திரும்ப பெற்று இடைத்தேர்தல் வந்தால் குழப்பம் நீங்கும்: கொங்குநாடு ஈஸ்வரன்
18 எம்எல்ஏக்களும் வழக்கை திரும்ப பெற்றால் குழப்பங்கள் நீங்கும் என ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்,.
கோவை: தங்க தமிழ்செல்வனைபோல 18 எம்.எல்.ஏ.க்களும் வழக்கை திரும்ப பெற்று இடைத்தேர்தல் வந்தால் குழப்பங்கள் நீங்க வாய்ப்புள்ளதாக கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் ஈஸ்வரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
சென்னை - சேலம் புதிய 8 வழிச்சாலை திட்டத்திற்காக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருத்து கேட்பதில் மெத்தனம் நிலவுகிறது. சிறு விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சாலை அமைக்க வேண்டும். கபினி அணையில் கர்நாடக அரசு நீர் திறந்ததற்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பது கவலையாகவும் சிரிப்பாகவும் உள்ளது,
சொந்த நலனுக்காக கர்நாடக அரசை பாராட்டியுள்ளார். இப்படியே பேசிக்கொண்டிருந்தால் கமல்ஹாசன் மக்களிடம் காமெடியனாக பார்க்கப்படுவார். டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 தமிழர்களை விடுதலை செய்ய நல்ல தீர்வு காண வேண்டும்.
தங்க தமிழ்செல்வனைபோல 18 எம்.எல்.ஏ.க்களும் வழக்கை திரும்ப பெற்று இடைத்தேர்தல் வந்தால் குழப்பங்கள் நீங்க வாய்ப்புள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக்கும், தற்போதைய ஆட்சிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அரசின் செயல்பாடுகளில் வேகம் இல்லை. டாஸ்மாக்கினை மட்டுமே நம்பி அரசை நடத்த முடியாது. தொழிற்சாலைகள் மூடப்படுவதும், லட்சணக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பதும் தொடர்ந்து வருகிறது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி முதலீடுகளை ஈர்க்கும் தமிழக அரசு, மூடப்பட்ட 50 ஆயிரம் தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொழிற்சாலைகள் மூடலுக்கு பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி மட்டும் காரணமல்ல என்பதால், குழு அமைத்து விசாரிக்க வேண்டும். கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலம் மக்கள் கருத்துகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்க அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு ஈஸ்வரன் தெரிவித்தார்.