பணத்தாசை இருந்தால் நான் 20வது வயதிலேயே அரசியலுக்கு வந்திருப்பேன் - கனிமொழி வேதனை
எனக்கு மட்டும் பணம் ஆசை இருந்தால் நான் 20வது வயதிலேயே அரசியலுக்கு வந்திருப்பேன். ஆனால் அப்படி செய்யவில்லை என கனிமொழி கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: 2ஜி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரும் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து திமுகவினர் விழாக்கோலம் பூண்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கால் சொல்லமுடியாத அளவு துன்பங்களை தாம் அனுபவித்ததாக கனிமொழி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் கனிமொழி. அதில் அவர் கூறியுள்ளதாவது: கடந்த ஆறு வருடங்களாக செய்யாத தவறுக்காக பலமுறை கடும் மனஉளைச்சலுக்கு ஆளானேன். சுரங்கப்பாதையில் பயணம் செய்யும் தான் என்றாவது ஒருநாள் வெளிச்சத்தை பார்த்து விடுவேன் என்ற நம்பிக்கையுடன் இந்த வழக்கை கடந்ததாகவும், இந்த வழக்கின் தீர்ப்பு அந்த வெளிச்சத்தை காட்டிவிட்டது.
நாட்டிற்கு பல லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் வழக்கில் தான் வேண்டுமென்றே சேர்க்கப்பட்டதாகவும், திமுகவை அரசியல் ரீதியாக பழிவாங்கவும், தேர்தலில் தோல்வியடைய செய்யவும் இந்த பழிவாங்குதல் நடவடிக்கை நடைபெற்றது.
தலையிட்டதும் கிடையாது
20 நாட்களே ஒரு நிறுவனத்தின் இயக்குனராக இருந்த காரணத்திற்காக இந்த வழக்கில் தாம் சேர்க்கப்பட்டேன். அந்த நிறுவனத்தின் எந்த செயல்பாட்டிலும் தான் தலையிட்டது கூட இல்லை என்று, ஒரு கையெழுத்தோ அல்லது நிறுவனம் தொடர்பான மீட்டிங்கிலும் நான் பங்கேற்றதே இல்லை.
அமைச்சர் பதவியை தவிர்த்தேன்
நான் ஒரு அரசியல்வாதி கிடையாது, நான் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாளர் எனக்கு அதிகார போதையின் மீதோ எனக்கு ஈடுபாடு இல்லை. அமைச்சர் பதவி தேடி வந்த போது கூட நான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை, மக்களுக்கு சேவை செய்ய தான் நான் நினைத்தேன்.
முன்பே அரசியலுக்கு வந்திருப்பேன்
பணத்தின் மீதும், சொத்தின் மீது ஆசை இருந்திருந்தால் நான் என்னுடைய 20வது வயதிலே அரசியலுக்கு வந்திருப்பேன், 40 வயது வரை காத்திருந்திருக்க மாட்டேன். செய்யாத குற்றத்திற்காக நான் கடந்த 6 வருடமாக பெரும் துன்பத்தை அனுபவித்து வந்தேன். அவை அனைத்தும் இந்த தீர்ப்பின் மூலமாக தீர்ந்து விட்டது.
குற்றச்சாட்டுக்கள் அச்சுறுத்தின
தன் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டுகள் பலமுறை தன்னை அச்சுறுத்தினாலும், தன் குடும்பத்தினர் மற்றும் கட்சி உறுப்பினர்களின் ஆதரவினால் இந்த மனஉளைச்சல் மிக்க ஆறுவருடத்தை கடந்து வந்திருக்கிறேன். இனிமேல் தன்னுடைய அரசியல் வாழ்க்கை முழுவதும் தமிழக மக்களுக்காக உழைப்பேன் என்றும் கனிமொழி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.