சுரங்க மெட்ரோ ரயிலை சேதப்படுத்தினால் 10 ஆண்டுகள் ஜெயிலாம்!
திருமங்கலம்- நேரு பூங்கா இடையே இயக்கப்படும் மெட்ரோ ரயிலை சேதப்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: திருமங்கலம்- நேரு பூங்கா இடையே நாளை முதல் இயக்கப்படவுள்ள மெட்ரோ ரயிலை சேதப்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடங்கப்பட்டன. முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை தொடங்கி கடந்த ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இரண்டாவது கட்டமாக சின்னமலை- கோயம்பேடு வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 3-ஆவது கட்டமாக திருமங்கலத்திலிருந்து நேரு பூங்கா வரை நாளை முதல் சுரங்க ரயில் இயக்கப்படுகிறது. இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கிறார்.
மது அருந்திவிட்டு பயணம்...
மது அருந்தி விட்டு பயணம் செய்பவர்கள், பயணிகளுக்குத் தொல்லை கொடுப்பவர்களுக்கு, மெட்ரோ ரயில் சொத்துகளுக்கு கேடு விளைப்பவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். ஆபத்தான பொருட்களை (பட்டாசு, வெடிபொருள்கள்) கொண்டு செல்பவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும்.
போஸ்டர் ஒட்ட கூடாது
மெட்ரோ ரயில் சொத்துகளில் போஸ்டர் ஒட்டுவது, எழுதுவது, வரைவது ஆகியவற்றுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும். மெட்ரோ ரயில் கூரை மீது பயணம் மேற்கொள்ள முயன்றால் ஒரு மாதம் சிறைத்தண்டனை, ரூ. 50 அபராதம் விதிக்கப்படும்.
தண்டவாளங்களில் நடந்தால்...
மெட்ரோ ரயில் தண்டவாளங்களில் நடந்தால் 6 மாதம் சிறைத்தண்டனை அல்லது ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். ஓடும் ரயிலை தடுத்து நிறுத்தினாலோ, தாக்குதல் நடத்தினாலோ 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். ரயிலில் உள்ள தொலைத்தொடர்பு சாதனங்களைத் தேவையில்லாமல் பயன்படுத்தினாலோ, அவசர கால பொத்தானை தவறாகப் பயன்படுத்தினாலோ ஓராண்டு சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம் பெறப்படும்.
நோ மார்க்கெட்டிங்
உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு ரூ.500 அபராதம், 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும். ரயிலை விபத்துக்குள்ளாக்குவது, கொலை முயற்சி, சக பயணிகளைத் தாக்கி குற்றங்களில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். மெட்ரோ ரெயில் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.