காங்கிரஸ் வலுவான எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் ஜிஎஸ்டி வந்திருக்குமா? டி.ராஜேந்தர் நறுக்: வீடியோ
மத்தியில் காங்கிரஸ் கட்சி வலுவான எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் ஜிஎஸ்டி அமுல்படுத்தப்பட்டிருக்குமா என டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலிமையாக இருந்திருந்தால் சரக்கு மற்றும் சேவை வரியை அமுல்படுத்தியிருக்க முடியுமா? என லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை அமுல்படுத்திய பிறகு பல்வேறு தரப்பினரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் இது குறித்து கூறும்போது, ''பல துறைகளில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெறுகின்றனர் ஆய்வாளர்கள். ஆனால் மக்கள் மீது எப்படியெல்லாம் வரி சுமத்தலாம் என ஆராய்ச்சி செய்திருக்கிறார் மோடி. பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கின்றனர் அதிர்ச்சி. இதனால் மக்களிடம் இல்லை மகிழ்ச்சி.
பாஜக வட இந்தியாவை வாழ வைக்க நினைக்கிறது. இந்தி சினிமா உலகத்தை வாழ வைக்க நினைக்கிறார்கள். தமிழ் உள்ளிட்ட மற்ற சினிமா உலகத்தினரை சிரமத்தில் ஆழ்த்துகின்றனர்.
எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலிமையாக இருந்திருந்தால் சரக்கு மற்றும் சேவை வரியை அமுல்படுத்தியிருக்க முடியுமா? தமிழகத்தில் நடக்கும் ஆட்சியின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? அதிமுகவினரை யாரோ பொம்மையாக ஆட்டுவிக்கிறார்கள்'' என டி.ராஜேந்தர் கூறினார்.