கூட்டணி ஆட்சிக்கு சம்மதித்திருந்தால் திமுக உடன் விஜயகாந்த் இணைந்திருப்பார்... சொல்வது திருமாவளவன்
சென்னை: கூட்டணி ஆட்சி என்கிற கருத்துக்கு உடன்பட்டிருந்தால், விஜயகாந்தே தி.மு.க.வோடுதான் கூட்டணி அமைத்திருப்பார். தி.மு.க.வும் ஆட்சியைப் பிடித்து இருக்கும். இது நிதர்சனமான உண்மை. ஆனால் திமுக பிடிவாதமாக கூட்டணி ஆட்சிக்கு உடன்படவில்லை. அதையும் வெளிப்படையாகவே அறிவித்தது. அதன் பிறகுதான் மக்கள் நலக் கூட்டணியோடு தேமுதிக இணைகின்ற ஒரு சூழல் ஏற்பட்டது என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைத்தால் தான் அதிகார பகிர்வு இருக்கும், ஊழலை ஒழிக்க முடியும் என்று பேசி வந்தவர் திருமாவளவன்.
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து தமிழகத்தில் காங்கிரஸ், திமுக, அதிமுக என ஒரு கட்சி ஆட்சியே நடந்து வருகிறது. 1967க்குப் பிறகு திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வேறு ஒரு கட்சியோ, கூட்டணியோ ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை.
1977ல் கூட்டணி ஆட்சி என்ற கொள்கையுடன் ஜனதா கட்சி பெயரில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டன. இதனால் முதல்முறையாக இந்தியாவில் கூட்டணி ஆட்சி அமைந்தது. அதுபோல தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி என்ற லட்சியத்துடன் புதிய கூட்டணி அமைய வேண்டும் என்று விரும்பினார் திருமாவளவன்.
கடந்த 2009 லோக்சபா தேர்தல், 2011 சட்டசபை தேர்தல், 2014 லோச்சபா தேர்தல்களை திமுக கூட்டணியில் இணைந்து சந்தித்த திருமாவளவன், கூட்டணி பேச்சு வார்த்தையின் போது நேர்ந்த கசப்பான அனுபவங்களினால் திமுகவில் இருந்து மெல்ல மெல்ல விலகினார். கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை முன் வைத்தார்.
கடந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினார். இந்த கருத்தரங்கத்திற்காக கரம் கோர்த்த கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நலக்கூட்டணி உருவானது. கூட்டணி ஆட்சி என்ற முழக்கம் வேகமாக வெளிப்பட்டது.
திமுக, அதிமுக, பாஜக, பாமக உடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று கூறிய மக்கள் நலக்கூட்டணி தேமுதிகவை தன்னுடன் இணைத்துக் கொண்டு விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. இந்த கூட்டணியில் கடைசி நேரத்தில் தமாகாவும் இணைந்தது.
நால்வர் அணியாக இருந்த போது கிடைத்த வரவேற்பு பஞ்சபாண்டவர் அணியாக மாறிய போது வரவேற்பு சற்று குறைந்து போது, பின்னர் ஆறுமுக கூட்டணியாகி கடைசியில் திருமாவளவனைத் தவிர அனைவரும் பரிதாபகரமான தோல்வியை சந்தித்தனர்.
சட்டசபை தேர்தலில் தேமுதிகவிற்காக திமுக, பாஜக ஆகிய கட்சிகள் காத்திருந்த நிலையில் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்தார் விஜயகாந்த். காரணம் முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்புதான் அவரை மநகூட்டணியில் இணைய வைத்தது. இதனை தேமுதிகவினரே ரசிக்கவில்லை.
தேர்தல் முடிந்து அதிமுகவே மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. தேர்தல் தோல்விக்கான காரணங்களை பல கட்சியினரும் அலசி வரும் நிலையில் 87 வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போன திருமாவளவன்தான் தனது தோல்விக்கான காரணத்தை அதிகம் ஆராய்ச்சி செய்து வருகிறார்.
அரியலூர் மாவட்டம், அங்கனூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார், தமிழக அரசும் எதிர்க்கட்சியும் இணக்கமாக செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.இதற்கு மக்கள் நலக்கூட்டணியும் ஒரு காரணம் என்று கூறினார்.
அ.தி.மு.க.விற்கும், பா.ஜ.க.விற்கு அரசியல் உறவு ஏற்படும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி கணித்துள்ளார். கட்சிகள் அவரவர் வெற்றி வாய்ப்பின் அடிப்படையில் கூட்டணி அமைத்துக் கொள்வார்கள். இது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கூட்டணி ஆட்சி என்கிற கருத்துக்கு உடன்பட்டிருந்தால், விஜயகாந்தே தி.மு.க.வோடுதான் கூட்டணி அமைத்திருப்பார். தி.மு.க.வும் ஆட்சியைப் பிடித்து இருக்கும். இது நிதர்சனமான உண்மை. ஆனால் திமுக பிடிவாதமாக கூட்டணி ஆட்சிக்கு உடன்படவில்லை. அதையும் வெளிப்படையாகவே அறிவித்தது. அதன் பிறகுதான் தேமுதிக மக்கள் நலக் கூட்டணியோடு இணைகின்ற ஒரு சூழல் ஏற்பட்டது என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கூட்டணி ஆட்சிக்கு திமுக முதலிலேயே சம்மதித்திருந்தால் திருமாவளவனே திமுக கூட்டணியை விட்டு வெளியேறியிருக்க மாட்டார், மக்கள் நலக்கூட்டணியும் உருவாகியிருக்காது என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.