ரவுடித்தனமாக நடந்துகொள்ளும் திமுக உறுப்பினர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள்.. ஸ்டாலின் எச்சரிக்கை!
சென்னை: பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பெண்களிடம் வரம்பு மீறி ரவுடித்தனமான செயல்களில் ஈடுபடுவோர் என யாராக இருந்தாலும் கழக விதிகளின்படி கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை, மேற்கு ஒன்றியம், அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் பெரம்பலூர் மாவட்ட திமுக முன்னாள் கவுன்சிலராகப் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் பியூட்டி பார்லர் நடத்தி வரும் சத்யா என்ற பெண்னை செல்வகுமார் சரமாரியாக தாக்கினார். பெண் என்றும் பாராமல் எட்டிஎட்டி வயிற்றில் உதைத்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கட்சியிலிருந்து நீக்கம்
இதையடுத்து பெரம்பலூர் டவுன் போலீஸார் செல்வகுமாரை கைது செய்தனர். இந்நிலையில் அவரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இடைநீக்கம் செய்வதாக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் நேற்று அறிவித்தார்.
ஸ்டாலின் எச்சரிக்கை
கழகத்திற்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில், பெரம்பலூரில் பெண்மணி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியவர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
|
கழகம் அனுமதிக்காது
தனிப்பட்ட பிரச்சினைகள் - விருப்பு வெறுப்புகளைக் கொண்டு இதுபோன்ற அராஜக செயல்களில் ஈடுபடுபவர்களை தி.மு.கழகம் அனுமதிக்காது!
|
தண்டிக்கப்படுவீர்கள்
தனிநபரை விட கழகமே உயர்ந்தது என்ற உணர்வின்றி செயல்படுபவர்களையும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பெண்களிடம் வரம்பு மீறி ரவுடித்தனமான செயல்களில் ஈடுபடுவோர் என - யாராக இருந்தாலும் கழக விதிகளின்படி கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுக்கிறேன்! இவ்வாறு ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.