3 தொகுதி மக்களே உஷார்.. பழைய ரூபாய் நோட்டை மாற்றும் போது கையில் மை வைக்காதீங்க.. ஓட்டு போட முடியாது
நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ள 3 தொகுதி வாக்காளர்களின் விரல்களில் பழைய நோட்டை மாற்றும் போது வைக்கப்பட்ட மை இருந்தால் ஓட்டுப் போட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் விரல்களில் பழைய ரூபாய் நோட்டை மாற்றும் போது மை வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் ஓட்டு போட முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நவம்பர் 19ம் தேதி, அரவக்குறிச்சி, தஞ்சை மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, அங்கு நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரச்சாரங்கள் இன்று மாலை 5 மணியோடு முடிந்து வாக்களிப்பதற்கு மக்கள் தயாராகும் நேரம் இது.
இந்நிலையில், இந்த 3 தொகுதி வாக்காளர்களுக்கும் ஒரு புதிய பிரச்சனை எழுந்துள்ளது. அதாவது, 500 மற்றும் 1000 ரூபாய் பழைய நோட்டுகளை மாற்றப் போகும் போது கை விரலில் மை வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து, பணத்தை மாற்றுவோர் விரல்களில் கடந்த 2 நாட்களாக மை வைக்கப்பட்டு வருகிறது. இந்த 3 தொகுதி வாக்காளர்களின் விரல்களில் மை வைக்கப்பட்டிருந்தால் ஓட்டுப் போட முடியாது என்று தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மக்கள் வங்கிகளுக்கு பணம் மாற்ற செல்லும் போது கவனமாக மை வைத்து கொண்டு வரவும். தவறுதலாக இடது கை ஆள்காட்டி விரலில் மை வைத்து விட்டால், அவருக்கான வாக்குரிமை பறிபோய்விடும் என்று எச்சரித்துள்ளார்.
இந்த அறிவிப்பை, தேர்தல் ஆணையம் மத்திய அரசு அறிவித்த உடனேயே அறிவித்திருக்கலாம். 3 தொகுதி மக்களும் இந்த நேரம் அவர்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி இருப்பார்கள். கை விரலில் மையும் வைத்திருப்பார்கள். ஒரு சில வங்கிகள் வலது கை விரலில் மை வைத்தன. ஒரு சில வங்கிகள் இடது கை விரலில் மை வைத்தன. மேலும், சாப்பிடும் கை விரலில் மை இருக்க வேண்டாம் என்று நினைத்தவர்கள் இடது கையிலேயே மை வைத்துக் கொண்டு சென்றனர்.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் இப்படி அறிவித்திருப்பது 3 தொகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அப்படி என்றால் ஏற்கனவே பணம் மாற்றும் செய்யும் போது இடது கை விரலில் மை வைத்தவர்களுக்கு யார் பொறுப்பு ஏற்பது. ஏன் இப்படி மத்திய அரசு செய்கிறது என்று 3 தொகுதி வாக்காளர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.