அம்மா இருந்திருந்தால் தலைமை செயலகத்தில் சிஆர்பிஎப் நுழைந்திருக்குமா? - ராம மோகன் ராவ்
ஜெயலலிதா இருந்திருந்தால் தலைமை செயலகத்திற்குள் துணை ராணுவம் நுழைந்திருக்குமா? என்று முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன் ராவ் கூறியுள்ளார்.
சென்னை: போயஸ்கார்டனுக்கு நெருங்கிய தொடர்புடைய சேகர் ரெட்டி வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் பல நூறு கோடி ரூபாய் பணம், கிலோ கணக்கில் தங்கத்தை கைப்பற்றினர். சேகர் ரெட்டியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சட்ட விரோதமாக பணம் பறிமாற்றம் செய்யப்பட்டதாக தெரியவரவே அவரை சிபிஐ கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சேகர் ரெட்டியின் நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த புதன்கிழமையன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். 25 மணி நேரம் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பிய நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு தினங்கள் மருத்துவமனையில் இருந்த ராம மோகன் ராவ் வீடு திரும்பினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருமான வரி சோதனையின் போது 25 மணி நேரம் சிஆர்பிஎப் போலீசாரால் வீட்டு சிறைக்காவலில் வைக்கப்பட்டதாக கூறினார்.
வருமான வரித்துறையினரால் சர்ச் வாரண்ட் இல்லாமல் தனது வீட்டிற்கு வந்து சோதனை நடத்தியதாகவும், தலைமை செயலகத்திற்குள் உள்ள எனது அலுவலகத்தில் சிஆர்பிஎப் நுழைந்தது.
நான் தான் தலைமை செயலாளர், நான் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் நியமனம் செய்யப்பட்டேன். யாருக்காவது தைரியம் இருக்கிறதா? அம்மா இருந்திருந்தால் சிஆர்பிஎப் உள்ளே நுழைந்திருக்குமா? தமிழக மக்களுக்கு எல்லாம் தெரியும். மெரீனா கடற்கரையில் அம்மா உறங்கிக் கொண்டிருக்கிறார். அது தெரிந்துதான் கண்டவர்களும் தமிழகத்திற்கு கால் வைக்கிறார்கள் என்று கூறினார் ராம மோகன் ராவ்.
தமிழகத்தில் இப்போது பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. அம்மா இல்லாத தமிழ்நாட்டில் இப்போது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கூறியுள்ளார் ராம மோகன் ராவ்.