அய்யர் தனது தடித்த நாக்கை அடக்காவிட்டால் பாஜகவினர் தாக்குவார்கள்: ஹெச். ராஜா
நாகை மாவட்டம் திருக்கடையூரில் பாஜக மாநில துணைத் தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசிடம் நாட்டை முன்னேற்றத் தேவையான திட்டங்கள் எதுவும் இல்லை. வாஜ்பாய் ஆட்சியில் தங்க நாற்கரச்சாலை கொண்டு வரப்பட்டது. அந்த பாதையில் இந்தியாவின் 4 முக்கிய நகரங்களை இணைத்து புல்லட் ரயிலை இயக்க, 100 புதிய நகரங்களை நிர்மாணிக்க மோடி திட்டமிட்டுள்ளார். மோடிக்கு பொருளாதாரம் தெரியவில்லை என்று கூறுவது தவறு.
அவர் ஆட்சி செய்யும் குஜராத்துடன் வேறு எந்த மாநிலத்தையும் ஒப்பிடக் கூடாது. குஜராத்தை சீனாவுடன் தான் ஒப்பிட வேண்டும் என்று உலக நாடுகளே ஒப்புக் கொண்டுள்ளன.
மணிசங்கர் அய்யர் தனது தடித்த நாக்கை அடக்காவிட்டால் பாஜக தொண்டர்களின் நேரடி தாக்குதலுக்கு அவர் ஆளாகுவார். மோடியை டீ விற்கச் சொல்லும் அய்யர் சோனியா காந்தியை அவர் முன்பு லண்டனில் செய்த வேலையை செய்யுமாறு கூறுவாரா?. திறமையான பிரதமர் இருந்திருந்தால் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்யாது.
கெஜ்ரிவால் நடத்தும் போராட்டங்கள் கோமாளித்தனமாக உள்ளது. மக்கள் அவரை நம்பி ஏமாந்து போய்விட்டனர் என்றார்.