ஒரிஜினல் லைசென்ஸ் தொலைந்து போனால் உடனடியாக மாற்று ஆவணம்... போலீஸ் இணையதளத்தில் வசதி!
ஒரிஜினல் லைசென்ஸ் தொலைந்து போனால் உடனடியாக மாற்று ஆவணம் பெற போலீஸ் இணையதளத்தில் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
சென்னை : வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்ஸை கையில் வைத்திருந்தால் தொலைந்து போகும் அபாயம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, தொலைந்து போகும் ஆவணங்களுக்கு உடனடியாக மாற்று ஆவணம் அளிக்கப்படும் என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் நாளை முதல் வாகன ஓட்டிகள் கட்டாயம் ஒரிஜினல் லைசென்ஸை கையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், கார் ஓட்டுபவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆனால் ஒரிஜினல் லைசென்ஸை கையில் வைத்திருந்தால் அது தொலைந்து போவதற்கான வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இது குறித்து போலீஸ் தரப்பில் ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
புதிய வசதிகள்
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், வழக்கு ஆவணம் மற்றும் தொலைந்து போன ஆவணங்கள் குறித்து புகார் அளிக்கவும், தொலைந்து போன ஆவணங்களின் நகல் பெறவும் www.tnpolice.gov.in என்ற போலீஸ் இணையதளத்தில் இரண்டு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
விரைவாக பெற ஏற்பாடு
இந்த புதிய வசதி மூலம் சாலை விபத்துகளில் பாதிக்கப்ப்டடவர்கள் இழப்பீடு தொகையை பெறவும், சாலை விபத்தில் இறந்தவர்களின் சட்ட பிரதிநிதிகளும் இந்த வசதியின் வாயிலாக விரைவாக ஆவணங்களை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக கோரப்படும் ஆவண நகல்கள் இமெயிலில் அனுப்பி வைக்கப்படும் என்றும் நெட் பாக்கிங் வசதியை பயன்படுத்த ஒவ்வொரு ஆவணத்திற்கும் ரூ.10 செலுத்த வேண்டும். அரசு ஈ சேவை மையத்துடன் இந்த சேவையை இணைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
புகார் அளிக்க எளிய நடைமுறை
ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ தொலைந்து போனால் போலீசில் புகார் அளிக்கும் நடைமுறையும் எளிமையாக்கப்பட உள்ளன. மாற்று ஆவணங்கள் கோரும் நபர் தன்னுடைய மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
இருந்த இடத்திலேயே பதிவு செய்யலாம்
அவ்வாறு பதிவு செய்யப்படும் எண்ணுக்கு அனுப்பப்டும் ஓடிபி(otp) அடிப்படையில் உண்மைத் தன்மை உறுதிசெய்யப்பட்டு, பின்னர் தொலைந்த ஆவண நகல் தனி எண்ணுடன் உடனடியாக வழங்கப்படும். ஆவணம் வழங்கும் அதிகாரிகள் உண்மைத் தன்மையை சரிபார்க்க இணையதளத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதை பயன்படுத்தி ஓட்டுனர் லைசென்ஸை உடனடியாக பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை
போலீசார் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய இணையதள வசதி சென்னையில் நாளை தொடங்குகிறது. மற்ற மாவட்டங்களில் அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர், மாவட்ட எஸ்.பி அலுவலகங்களில் இன்று முதலே செயல்பாட்டுக்கு வருகின்றன.