சசி முதல்வரானால் அதிமுக உடையும்?... ஆட்சியை கைப்பற்றுமா திமுக? பாஜகவுக்கு என்ன கிடைக்கும்?
சசிகலா முதல்வரானால் நிச்சயம் கட்சி உடையும் என அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
சென்னை: சசிகலா முதல்வராக வந்தால் நிச்சயம் கட்சி உடையும் என அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. அப்படி நடந்தால் அதைப் பயன்படுத்தி திமுக ஆட்சியமைக்க முயலுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அதே நேரத்தில் குழப்ப நிலையைப் பயன்படுத்தி ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பாஜக முயலுமா என்ற பரபரபப்பும் உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றப் பிறகு சசிகலா இன்று இரண்டாவது முறையாக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் சற்றுநேரத்தில் கூட்டம் நடைபெறுகிறது.
இதில் முதல்வராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தேர்வு செய்யப்படுவார் என தகவல் பரவியுள்ள நிலையில் சசிகலா முதல்வராக பதவியேற்றால் அதிமுக நிச்சயம் உடையும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றதே கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள் சிலருக்குப் பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் முதல்வரானால் அது கட்சியில் பெரும் பாதிப்பை .ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
ஓபிஎஸ்க்கே ஆதரவு
கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். சசிகலா கட்சி மற்றும் ஆட்சி நடவடிக்கைகளில் தலையிடுவது அதிமுக நிர்வாகிகள் மட்டுமின்றி அடிமட்டத் தொண்டர்களுக்கும் பிடிக்கவில்லை.
கட்சி நிச்சயம் உடையும்
அரசியல் ஆதாயத்திற்காக சிலர் சசிகலாவுக்கு கட்சிக்குள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என கூறப்படுகிறது. இந்நிலையில் சசிகலா முதல்வரானால் கட்சி நிச்சயம் உடையும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆட்சியமைக்க முயலுமா திமுக?
அப்படி நடந்தால் சில எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கினாலே திமுக எளிதாக ஆட்சி அமைக்க தகுதி பெற்றுவிடும். இதனை பயன்படுத்தி திமுக ஆட்சியமைக்க முயலுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி?
அதேநேரத்தில் இந்த குழப்பத்தை பயன்படுத்தி பாஜக ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வரமுடியும். இதனால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை நடைமுறைப்படுத்த பாஜக முயலுமா என்ற எதிப்பார்ப்பும் எழுந்துள்ளது.
சூட்டைக் கிளப்பிவிட்ட ஸ்டாலின்
இதனிடையே மன்னார்குடி கும்பலைச் சேர்ந்தவர்கள் முதல்வராக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் சூழ்நிலையை திமுக உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறியுள்ள அவர் தற்போது உள்ள சூழ்நிலையில் திமுக எந்தவொரு முடிவையும் ஜனநாயக விதிகளுக்குட்பட்டே எடுக்கும் என்றும் கூறியுள்ளார். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியின் தலைவர் இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.